பா.ஜ.க வேட்பாளரின் காரில் இவிஎம் மெஷின்: ''யாராக இருந்தாலும் விடாதீங்க''.. சொல்கிறார் அமித்ஷா!
டெல்லி: அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் இவிஎம் மெஷின் இருந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸாமில் 39 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது.
காரில் வாக்குப்பதிவு எந்திரங்கள்
பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக வைபப்தற்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் பதார்கண்டி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.அவ்வாறு கொண்டு செல்லும் வழியில் அசாமின் கரீம்காஞ்ச் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏவும், பத்ரகாண்டி தொகுதி வேட்பாளருமான கிருஷ்னெந்து பாலின் காரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் பொறுப்பில் இருக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாஜக வேட்பாளரிடம் சென்றது எப்படி? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினார்கள். காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் ''தேர்தலின்போது ஒவ்வொரு முறையும் இதுபோல் நடக்கிறது'' என்று குற்றம்சாட்டினார்கள்.
4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
வாக்குப்பதிவு எந்திரங்களை கவனமாக கையாண்டதாக 4 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையே பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணெந்து பால் இவிஎம் திருடிய குற்றச்சாட்டுகளை மறுத்தார். தனது டிரைவர் மட்டுமே காரில் இருந்ததாகவும், தேர்தல் அதிகாரிகள் உதவி கோரியதாலதான் அவர்களுக்கு டிரைவர் உதவினார் என்று விளக்கம் அளித்தார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. '' தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒரு வாகனத்தில் எடுத்துச் சென்றபோது, அந்த வாகனம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக வந்த தனியாருக்குச் சொந்தமான ஜீப்பில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இந்த தகவல் அறிந்து வாகனத்தை பொதுமக்கள் நிறுத்தியபோதுதான், இது பா.ஜ.க. வேட்பாளருடைய வாகனம் என்பது என்பது தெரிய வந்தது'' என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
அமித்ஷா மனம் திறந்தார்
இந்த நிலையில் மத்திய உள்துறை அமித்ஷா, இந்த விவகாரம் குறித்து முதன் முறையாக கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், '' நான் தென்னிந்தியாவில் பிரசாரம் செய்து கொண்டிருந்ததால், காரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த விவரங்கள் எனக்கு தெரியாது. இது தொடர்பான விவரங்கள் பெறப்படும். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை. இந்த விவகாரத்தில் உண்மை தன்மை இருந்தால் தேர்தல் ஆணையம் கட்டாயம் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கண்டிப்பாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.என்று அமித்ஷா கூறினார்.