டெல்லியில் ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை… கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
டெல்லி: 30 லட்சம் ரூபாயுடன் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவாடா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள கார்ப்பரேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தில் 30 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் இந்த ஏ.டி.எம் மையத்தின் ஷட்டரை மூடாமல், காவலாளி இரவு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
சுயேட்சையைப் போல் அமமுக உள்ளது... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்
இந்த நிலையில், 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவுக்கு செல்லும் வயர்களை அறுத்து எறிந்துவிட்டு சிசிடிவி கேமராவில் கிரீசை தடவி உள்ளனர். இதையடுத்து, ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் பெயர்த்து எடுத்து தூக்கிச் சென்றுள்ளனர். வழக்கம் போல் அடுத்த நாள் காலையில் வந்த காவலாளி ஏடிஎம் இயந்திரம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
இதுகுறித்து தகவலறிந்த வங்கி மேலாளர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 2 மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கூறினர். ஏடிஎம் இயந்திரத்திற்கு அருகே இருந்த சிசிடிவி கேமிராகளை கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு சிறிது மணி நேரங்களுக்கு முன்பாக ஏடிஎம் இயந்திரத்தில் 16 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்டதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். இந்தியக் குற்றவியல் சட்ட பிரிவு 380 (திருட்டு) மற்றும் 457 (குற்றச்சாட்டு) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.