உச்சநீதிமன்றம் மீதான விமர்சனம்: ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி மறுத்த அட்டர்னி ஜெனரல்
டெல்லி: உச்சநீதிமன்றத்தை விமர்சித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதற்கு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, உச்சநீதிமன்றத்தையும் கூட பயன்படுத்தி மக்களை மத்திய பாஜக அரசு அச்சுறுத்தி வருகிறது என ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் கூறியிருந்தாராம். இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என மாதவி என்ற வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
மேலும் இத்தகைய விமர்சனத்துக்காக மு.க.ஸ்டாலின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலிடம் மாதவி அனுமதி கோரியிருந்தார். ஆனால் இதற்கு அட்டர்னி ஜெனரல் அனுமதி அளிக்கவில்லை.
அத்துடன், தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுதான்.. இதை பொருட்படுத்த தேவையும் இல்லை. இதற்கு எல்லாம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நிறைய கருத்துகளுக்கு வழக்கு போட வேண்டிய நிலை வரும்.
உச்சநீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் கருத்துகள் கூறப்பட்டால் அப்போது அவமதிப்பு வழக்கு தொடரலாம். அதற்கும் ஒப்புதல் வழங்க முடியும். தற்போதைய நிலையில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என பதில் அனுப்பி இருக்கிறார் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்.