இந்த இரு நாட்கள்.. வங்கி சேவை பாதிக்கப்படலாம்! என்ன காரணம் தெரியுமா? முக்கிய தகவல்
டெல்லி: வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கொள்கைகள் அரசு ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில் அகில இந்தியா தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக வரும் 28 மற்றும் 29ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

வேலை நிறுத்தம்
இந்நிலையில், தொழிலாளர்களைப் பாதிக்கும் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாளை (மார்ச் 28) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 29) ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கித் துறையும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்திற்கும், வங்கி சட்ட திருத்த மசோதா 2021க்கும் எதிர்ப்பு தெரிவித்தும் வங்கி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
இதனிடையே வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் அறிவித்துள்ளது. ஓய்வுபெற உள்ள தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றாலும் கூட அவர்களுக்கு ஓய்வூதியம் என்பது பாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகள் ஆதரவு
மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நிலக்கரி, உருக்கு, எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால், வருமான வரி, காப்பீடு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். அதேபோல ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை தொழிற்சங்கங்களும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications