2024 லோக்சபா தேர்தலை குறிவைத்த களமிறங்கும் பாஜக... தெற்கில் கொத்தாக அள்ள "ஸ்பெஷல் டீம்"ரெடி!
தெற்கிலும் காவிக்கொடி பறக்க வேண்டும் என்று லோக்சபா தேர்தலுக்காக இப்போதே புதிய டீமை தயார் செய்து வருகிறது பாஜக.
டெல்லி: வட இந்தியாவில் அதிக இடங்களை வென்று மத்தியில் ஆட்சியமைத்தாலும் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கேரளா, தெலுங்கானாவில் வெல்ல முடியவில்லையே என்ற மனக்குறை பாஜகவிற்கு இருக்கத்தான் செய்கிறது. வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் வெல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ள பாஜக சிறப்பு டீமை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று சொன்னது போலவே சட்டசபைத் தேர்தலில் 4 இடங்களில் வென்று பாஜக உறுப்பினர்கள் சட்டசபைக்குள் நுழைந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் கவுன்சிலர்களாக வென்றுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து சில உறுப்பினர்களையாவது நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதற்காக இப்போது முதலே காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டதாம் பாஜக.

தெலுங்கானாவில் வெற்றி பெற வியூகம்
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிராக பண்டி சஞ்சய் குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். அம்மாநில சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஆயத்த வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.

பிரம்மாண்ட பேரணி
தெலுங்கானாவில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பேரணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். கட்வால் நகரில் பொதுக் கூட்டத்திலும் பேசினார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். கூட்டத்தில் பேசிய பண்டி சஞ்சய் குமார், அநீதிக்கு எதிரான போராட்டத்தில் எங்களை நேரில் வந்து உற்சாகப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி என்று கூறினார். அவர் உண்மையிலேயே சிங்கமலை தான் என்று பாராட்டினார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் சிங்கமலை என கோஷமிட்டனர்.

தமிழகத்திலும் பாஜக யாத்திரை
அண்ணாமலைக்கு தெலுங்கானாவில் கிடைத்த தனி மரியாதை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பிரஜா சங்கரம யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திலும் இது போல பிரம்மாண்ட யாத்திரைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்தியாவை பாஜக ஆளும்
தெலுங்கானாவில் பண்டி சஞ்சய் குமார் சிங்கம் என அழைக்கப்படுகிறார். இதுகுறித்து பாஜக இளைஞரணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகத்து சிங்கம் அண்ணாமலையுடன் தெலுங்கானா சிங்கம். 2024 ஆம் ஆண்டு தென்னிந்தியாவை பாஜக ஆளும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இருவருமே முதல்வர் வேட்பாளர்களாகவும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

வாகை சூடுவாரா அண்ணாமலை
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கூறி வரும் நிலையில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் டெல்லி தலைமை மெச்சத்தக்க வகையில் வெற்றியை பெற்று வாகை சூட வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணாமலை. அதற்கான இப்போது முதலே பாஜக தொண்டர்களை தயார்படுத்த ஆரம்பித்து விட்டாராம். கூட்டணியைப் பொறுத்தே வெற்றி சாத்தியமாகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications