அடி விழுந்ததும் மக்களிடம் ஓடி வரும் பாஜக.. விவசாயிகளுக்கு போனஸ் தர அதிரடித் திட்டம்!
டெல்லி: நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் போனஸ் திட்டம் ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில், 3 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தி ஆட்சியமைத்தது. அதனை தொடர்ந்து தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் இறங்கியது.
அதன் முதன் கட்டமாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது.
கிட்டத்தட்ட 36 ஆயிரம் கோடி வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் நிதி நெருக்கடி காரணமாக மற்ற மக்கள் நல திட்டங்களையும், எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தடுமாறும் வகையில் உள்ளது.
இந் நிலையில், 3 மாநில தேர்தல்களில் ஆட்சியமைத்துள்ள காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு என்று பிரத்யேகமாக புதிய திட்டம் ஒன்றை பாஜக கொண்டு வருகிறது.
விவசாய மானியத்தை முடிவுக்கு கொண்டு வருவதால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் போனஸ் வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகளையும், செயல் வடிவாக்கத்தையும் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இருந்தும் நிபுணர்களிடம் இருந்தும் மத்திய அரசு பெற்றுள்ளது.
போனஸ் மட்டுமல்ல, விவசாயிகளும் சிறந்த பயிர் மற்றும் அதன் விற்பனையைப் பெற சிறந்த பயிற்சியை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு நீண்ட கால நன்மைகளை தருவது எது, பயிர் காப்பீட்டை விவசாயிகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் மத்திய அரசு விரிவாக விவாதிக்க முடிவு செய்துள்ளது.
விவசாயிகளுக்கு போதிய அளவு போனஸ் கொடுக்க தேவையான நிதி ஆதாரம் உள்ளது என்பது குறித்தும் நிபுணர்களிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.