டெல்லி சட்டசபை: ஊடகங்களின் கவனத்தை பெறுவதே பாஜக எம்எல்ஏக்களின் நோக்கம்.. விளாசிய துணை சபாநாயகர்
டெல்லி: ''ஊடகங்களின் கவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எதிர்க்கட்சிகளான பாஜக எம் எல் ஏக்கள் செயல்படுகின்றனர் என்றும் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை என்றும்'' டெல்லி சட்டசபையில் துணை சபாநாயகர் ராக்கி பிர்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தனக்கு ஆதரவாக இருப்பதை காட்டும் வகையில் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திக் காட்டுவதாகவும் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

பாஜகவின் ஆபரஷேன் லோட்டஸ் தோல்வி
இதன்படி, டெல்லியில் இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் மொத்தமுள்ள 70 எம்எல்ஏக்களில், 58 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிரூபித்தார். ஆம் ஆத்மி கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், ஒருவர் சிறையில் உள்ளதாகவும், மற்றொருவர் அவையின் தலைவர் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். அனைத்து எம்.எல்.ஏக்களும் தன்னுடன் இருப்பதாக பேசிய கெஜ்ரிவால், பாஜகவின் ஆபரஷேன் லோட்டஸ் தோல்வி அடைந்து விட்டதாகவும் பேசினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை
முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு நோட்டீஸ் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.க்கள் வலியுறுத்தினர். ஆனால், இதற்கு துணை சபாநயகர் ராக்கி பிர்லா அனுமதி மறுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எந்த வித கவன ஈர்ப்பு தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றார்.

பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் விஜேந்தர் குப்தா, அபேய் வர்மா, மோகன் சிங் பிஸ்த் ஆகியோர் துணை சபாநாயகருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 பேரையும் வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு துணை சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி, 3 எம்.எல்.ஏக்களையும் அவைக்காவலர்கள் வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற பாஜக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்கே..
பின்னர் அவையில் பேசிய துணை சபாநாயகர் பிர்லா, ஊடகங்களின் கவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எதிர்க்கட்சிகள் அவைக்கு வருகின்றன. அவர்களுக்கு மக்களின் பிரதான பிரச்சினைகள் குறித்து எந்த கவலையும் கிடையாது. டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள், பாஜக எம்.எல்.ஏக்களின் பரஸ்பர அமளியால் அவை நடவடிக்கைகள் 3-வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications