நாங்கள் மக்களுக்கு நேரடியாக உதவுகிறோம்..காங்கிரஸ் வீட்டில் இருந்து அவதூறு பரப்புகிறது..நட்டா தாக்கு
டெல்லி: நாங்கள் மக்களுக்கு நேரடியாக உதவுகிறோம். காங்கிரஸ் வீட்டில் இருந்து அவதூறு பரப்புகிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்து 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நாளில் மக்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். எங்களுடைய எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி ஒவ்வொருவரும் இரு கிராமங்களுக்குச் சென்று மக்கள் சேவையில் ஈடுபடுவார்கள்.
கொரோனா காலத்தையும் பொருட்படுத்தாமல் பாஜகவினர் மக்களுக்கு உதவி செய்கிறார்கள். ஆனால் சில கட்சிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளன. அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்காமல் மெய்நிகர் முறையில் ஊரடங்கு குறித்தும், தடுப்பூசிகள் குறித்தும் தவறான கருத்துக்களை கூறி மக்களை திசைதிருப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மோடி தடுப்பூசி என்று விமர்சித்து, தடுப்பூசி செயல்பாடு, திறன் மீது கேள்வி எழுப்பு அவமதித்து வந்தனர். ஆனால் அவர்கள்தான் இப்போது தடுப்பூசி வேண்டும், வேண்டும் என்று அலைகிறார்கள். தற்போது 13 நிறுவனங்களுக்குத் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . விரைவில் இது 19 நிறுவனங்களாக உயர்த்தப்படும். பாரத் பயோடெக் நிறுவனம் அக்டோபர் மாதத்திலிருந்து 10 கோடி டோஸ்கள் தாயரிக்கும் என்று ஜே.பி.நட்டா கூறினார்.