”இதில் அரசியல் வேண்டாமே..” எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் திரௌபதிக்கு ஆதரவு கேட்ட பாஜக
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆதரவு திரட்டியுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழு மூச்சாக இறங்கின.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்
அதன் விளைவாக இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

தேர்தல் கணக்கு
2017 குடியரசுத் தலைவர் தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு இருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. எனவே அக்கட்சி தன்னுடன் கூட்டணியில் உள்ள அதிமுக, எதிர்க்கட்சி கூட்டணியில் இல்லாத பாஜக மீதும் விமர்சனங்களை வைக்காத ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் பீகாரை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களை நம்பியது. இந்த நிலையில் 3 கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்டதால் திரௌபதி முர்முவின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

வேட்புமனுத் தாக்கல்
இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் பாஜக
இதற்கிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவை கேட்டு வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃப்ரூக் அப்துல்லா, முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான தேவகவுடா உள்ளிட்டோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டு இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் அரசியல் இல்லாமல் ஒருமித்த கருத்துடன் திரௌபதி முர்முவை தேர்வு செய்ய அழைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications