ஆக்டிவ் அரசியல்வாதி.. வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முகம்.. சட்ட துறை அமைச்சரான கிரண் ரிஜிஜூ
டெல்லி: மத்திய கிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முகமாக உள்ள கிரண் ரிஜிஜூ மத்திய சட்ட துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களின் பாஜகவின் முகமாகத் திகழ்பவர் கிரண் ரிஜிஜூ. இதற்கு முன் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக (விளையாட்டுத் துறை) இருந்தார்.
இவர், தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரண் ரிஜிஜூ
பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருந்த அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் கிரண் ரிஜிஜூ. 49 வயதாகும் இவர், அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றார். டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் படித்த ஜோராம் ரினா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தேர்தல் வரலாறு
இவர் முதன்முதலில் 2004 மக்களவைத் தேர்தலில் அருணாசல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2009 மக்களவைத் தேர்தலும் போட்டியிட்ட இவர், வெறும் 1,314 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 2014 இல் மீண்டும் அதே அருணாசல் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மோடியின் முதல் ஆட்சியில் உள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகச் செயல்பட்டார்.

முன்னாள் முதல்வரைத் தோற்கடித்தவர்
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துக்கியை 1,74,843 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தார். இந்தத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 63.02 சதவீத வாக்குகள் கிரண் ரிஜிஜூ பெற்றிருந்தார். நபம் துக்கியால் வெறும் 14.22 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

புதிய சட்டத்துறை அமைச்சர்
உடற்பயிற்சியில் அதீத ஆரவம் கொண்ட கிரண் ரிஜிஜூ, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக (விளையாட்டுத் துறை) இருந்தார். அருணாச்சல பிரதேசம் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களில் முழுக்க செல்வாக்கு மிகுந்த பாஜக தலைவர்களில் ஒருவராக அறியப்படும் கிரண் ரிஜிஜூ, தற்போது மத்திய சட்டத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications