தாக்குதல் எதிர்பார்த்ததுதான், குண்டுவெடிப்பின் பின்னணியில் தீவிரவாதிகள்..சந்தேகிக்கும் இஸ்ரேல் தூதர்
டெல்லி: இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா தெரிவித்துள்ளார்.
பொதுவாக வெளிநாட்டுத் தூதரகங்களை மற்ற நாடுகளில் இயங்கும் ஒரு குட்டி நாடாகவே நாம் கருதலாம். வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எப்போதும் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும். எந்த தூதரகத்தின் அருகிலும் சிறு அசம்பாவித சம்பவம் நடைபெற்றாலும் அது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நேற்று திடீரென்று குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
இந்நிலையில், இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறுகையில், "இந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம். இதில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு உள்ளது. இது இஸ்ரேல் தூதரகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்" என்றார்.
29 ஆண்டுகள் நிறைவு
இந்தியாவுக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே, நேற்று நடைபெற்ற இந்த பயங்கரவாதிகள் தாக்குதல் தற்செயலானதாக இருக்காது என்றும் இது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குப் பின் யார் உள்ளனர் என்பதை தற்போது கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்பார்த்த தாக்குதல் தான்
இது குறித்து இஸ்ரேல் தூதர் ரான் மல்கா மேலும் கூறுகையில், "உலகெங்கும் உள்ள இஸ்ரேல் அமைப்புகள் அச்சுறுத்தலில்தான் உள்ளன. எனவே, இந்தத் தாக்குதல் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரியும். இதனால் கடந்த சில வாரங்களாகவே நாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருந்தோம்" என்றார்,
பின்னணியில் ஈரான்?
இந்தத் தாக்குதலுக்குப் பின் ஈரான் இருக்கலாம் என்றும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், இதற்கு எவ்வித ஆதாரமும் இப்போது வரை இல்லை. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் இஸ்ரேல் தூதரகம் தொடர்பான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இத்தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், இந்தியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.