பல “பீஸ்கள்”.. ஒரே “பேட்டர்ன்”! நெஞ்சை உறைய வைக்கும் 3 கொடூர கொலைகள் - அதிரும் வட இந்தியா
டெல்லி: காதலியை 35 துண்டுகளாக வெட்டிய ஆப்தாப் பூனாவாலாவை போன்றே அடுத்தடுத்த நாட்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கொடூர கொலைகள் அரங்கேறி உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியை சேர்ந்த ஸ்ரத்தா வாக்கரை அவரது காதலன் ஆப்தான் பூனாவாலா பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.
இந்த படுகொலை கொடுத்த அதிர்ச்சி ஓய்வதற்குள் அடுத்தடுத்து இதேபோல் 2 கொலைகள் வட இந்திய மாநிலங்களில் நடைபெற்று இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உ.பியில் காதலியை துண்டு துண்டாக்கிய காதலன்.. போலீசிடம் காட்டிய 'தௌலத்'.. அடுத்து நடந்த
ஸ்ரத்தா வாக்கர் கொலை
ஆங்கிலத்தில் வெளியான டெக்ஸ்டர் திரைப்பட பாணியில் ஸ்ரத்தா வாக்கரை பல துண்டுகளாக வெட்டிக் கொன்ற ஆப்தாப், பல இடங்களில் அவற்றை வீசியதுடன் ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி வாடை வெளியே வராமல் இருக்க அதில் வைத்து இருந்திருக்கிறார். 6 மாதங்களுக்கு பிறகு இந்த குற்றம் வெளியே வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கொலையாளி பிரின்ஸ் யாதவ்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆஜம்கரில் பிரின்ஸ் யாதவ் என்ற நபர் ஆராதனா பிரஜாபதி என்ற பெண்ணை பல துண்டுகளாக வெட்டி கொலை செய்து இருக்கிறார். நவம்பர் 15 ஆம் தேதி பஸ்சிமி என்ற கிராமத்தில் இருந்த கிணறு ஒன்றில் ஆராதனாவின் உடல் கிடப்பதை பொதுமக்கள் பார்த்த பிறகு இந்த கொலை சம்பவம் தெரியவந்தது.
காதலால் கொலை
இதனை தொடர்ந்து அவரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ஆராதனா பிரின்ஸுக்கு தெரியாமல் வேறொருவரை திருமணம் செய்து இருக்கிறார். அப்போது பிரின்ஸ் வெளிநாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
கோயிலுக்கு அழைத்த பிரின்ஸ்
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் ஆராதனா திருமணம் செய்ததை அறிந்த அவர், விவாகரத்து செய்யுமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஆராதனாவை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். கடந்த நவம்பர் 9 ஆம் தேதி கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஆராதனாவை பைக்கில் ஏற்றி சென்றுள்ளார் பிரின்ஸ்.
பல துண்டுகள்
ஆனால், அவரை கோயிலுக்கு செல்லாமல் கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்ற பிரின்ஸ், தனது உறவினர் சர்வேஸ் என்பவருடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். அதன் பிறகு அவரை 6 துண்டுகளாக பாலிதீன் கவரை கொண்டு உடலை சுற்றி கிணற்றில் தூக்கி வீசி உள்ளனர். தலையை மட்டும் சில அடி தொலைவில் உள்ள குளத்தில் எரிந்து இருக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு
இந்த கொலையில் ஈடுபட்ட யாதவுக்கு 7 பேர் உதவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட பிரின்ஸ் யாதவ் போலீசிடம் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தங்களை நோக்கி பிரின்ஸ் யாதவ் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பகீர்
இதேபோன்ற சம்பவம் மேற்கு வங்கத்திலும் அரங்கேறி உள்ளது. 55 வயதான இந்திய கடற்படை வீரரை அவரது மனைவியும் மகனும் சேர்ந்து படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடித்துவிட்டு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த அந்த அதிகாரி சம்பவத்தன்று மகனுக்கு தேர்வு கட்டணம் வழங்குவது தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
தாய் மகன் கைது
இதனால் ஆத்திரமடைந்த தாயும் மகனும் சேர்ந்து அவரை வீட்டிலேயே படுகொலை செய்து இருக்கின்றனர். அதன் பின்னர் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி உள்ளனர். கடற்படை வீரரின் மகன், பல கவர்களில் உடல் பாகங்களை வைத்து பைக்கில் சென்று அப்புறப்படுத்தி உள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.