டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விருந்தினர்கள் உடனே வெளியேற்றம்! பரபர சோதனை!
டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தமிழ்நாடு இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி காவல்துறைக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் இருந்து விருந்தினர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு சோதனை நடந்து வருகிறது.

தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்பட அனைத்து விருந்தினர்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு இல்லம்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரும் விருந்தினர் மாளிகை. டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு இல்லம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இல்லம், தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பின்பற்றுவதற்காக இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் தொடர்பில் உள்ளது. தமிழ்நாடு இல்லத்தில் இரண்டு வளாகங்கள் உள்ளன. முதல் விருந்தினர் மாளிகையின் பெயர் வைகை தமிழ்நாடு இல்லம். இரண்டாவது விருந்தினர் மாளிகை பொதிகை தமிழ்நாடு இல்லம் என்று அழைக்கப்படுகிறது.
பொதிகை இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் இருந்து விருந்தினர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், தமிழ்நாடு அரசு இல்ல ஊழியர்களை தனிப்பட்ட முறையில் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர்.
விமானங்கள், பள்ளிகள், பொழுதுபோக்கு இடங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் புரளிகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லியில் பள்ளிகள் பலவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications