பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது? விஆர்எஸ் விண்ணப்பித்தது எத்தனை பேர்.. நிறுவன தலைவர் பேட்டி
டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த 6 மாதத்தில் 4ஜி சேவையை தொடங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பிரவின் குமார் புர்வார் தெரிவித்துள்ளார்.
பாரத் சஞ்சார் நிகாம் என்ற பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் சுமார் 1.76லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
நவீன பொருளாதார மயமாக்கலின் காரணமாக தனியார்கள் தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்த பிறகு பிஎஸ்என்எல் நிறுவனம் நிதி சிக்கலில் தவித்து வருகிறது. இது ஒருபுறம் எனில் தனியார்களுக்கு 4ஜி சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்ட போது அரசின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படாமல் இருந்தது.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை
இப்போது அதற்கான தடைகல்லும் உடைக்கப்பட்டு உள்ளது. ஆம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை உரிமம் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தனியாருக்கு நிகராக இனி 4ஜி சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெண்டர் தொடங்கும்
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பிரவின் குமார் புர்வார் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். 4ஜி சேவை எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற கேள்விக்கு, 4ஜி சேவை தொடங்க ஆறு மாதங்கள் ஆகும். தற்போது உள்ள கருவிகளை மேம்படுத்தவும், சேவைகளை விரைவாக கிடைக்க இடங்களை அடையாளம் காண்பதற்கான பணிகளையும் செய்து வருகிறோம். இப்போது தான் டெண்டருக்கு செல்கிறோம். எனவே கொஞ்சம் காலம் ஆகும் என்றார்.
எவ்வளவு செலவு
பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்க எவ்வள செலவு செய்ய உள்ளது என்ற கேள்விக்கு சுமார் 12 ஆயிரம் கோடி செலவு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
விஆர்எஸ்
இதுவரை எவ்வளவு பேர் விஆர்எஸ்க்கு விண்ணப்பித்துள்ளனர் என்ற கேள்விக்கு, இப்போது வரை 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை இந்த விஆர்எஸ் திட்டத்தில் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன் 3 ஆயிரம் குரூப் ஏ அதிகாரிகளும் விஆர்எஸ் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என பிரவின் குமார் புர்வார் தெரிவித்தார்.
பிரவின் குமார் புர்வார்
விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை பாக்கி காரணமாக சுமார் ஒரு லட்சம் ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து உள்ளதாக கூறப்படுவது குறித்து உங்கள் பார்வை என்ன என்ற கேள்விக்கு, எங்கள் முன் சில சவால்கள் உள்ளது. புத்துயிர் திட்டங்கள் தொடங்கப்பட்டது எங்கள் செலவுகளை சமாளிக்க நியாயமான பணம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பி.எஸ்.என்.எல் சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை என்பது தாமதம் என்பதாக மட்டும் பார்க்க வேண்டும். அடுத்த 2 அல்லது மூன்று மாதங்களில் இது சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.