ஆட்சி முடியும் முன்பு.. பொதுத் துறை வங்கிகளை விற்று விடுவார்கள்.. பட்ஜெட் பற்றி ப.சிதம்பரம் கருத்து
டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரத்தம் வழிய வேண்டும்.. அப்போதுதான் அவற்றை தனியார்மயமாக்க முடியும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அதைத்தான் சொல்கிறது என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, இன்று காலை ப.சிதம்பரம் கூறுகையில், பட்ஜெட்டில் எப்படியும் ஏமாற்றம்தான் கிடைக்கப்போகிறது. நல்லது நடக்க வாய்ப்பே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாலை ஊடகங்களிடம் பேசிய ப.சிதம்பரம், இந்த பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
மத்திய பட்ஜெட்: முதலாளிகளுக்கு ஆதரவு; மக்களுக்கு ஏமாற்றம்... கமல்ஹாசன் நறுக் டுவிட்!
ரத்தம் வழிய விட்டுள்ளார்கள்
ரத்தம் வழிய வழிய பொதுத்துறை வங்கிகளை தவிக்க விட்டால்தான், அவற்றை தனியார்மயமாக்க முடியும் என்ற யுக்தியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அரசு வங்கிகள் இல்லாவிட்டால் எப்படி கல்விக்கடன் கிடைக்கும்?, எப்படி விவசாய கடன் கிடைக்கும்? பாஜக அரசு தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு அனைத்து பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்துவிடும்
மக்களை ஏமாற்றுகிறார்கள்
எங்கெல்லாம் தேர்தல் நடை பெறுகிறதோ அந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் அனைத்துமே நீண்ட காலத்துக்கு செயல்படுத்த வேண்டியவை. எனவே தேர்தலுக்கு முன்பாக இதை அறிவித்தால் மட்டும் போதும். அதை செயல் படுத்த தேவையில்லை, என்று மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்.
பணக்காரர்களுக்கு சாதகம்
ஜிஎஸ்டி வரி மீது வரி குறைப்புக்கான அறிவிப்பு இல்லை. இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட் மக்களை கைவிட்டு விட்டது, பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிக் கொள்கிறது. ஆனால் இது ஒரு தந்திரம்.
சிறு குறு தொழில்கள்
கொரோனா தடுப்பூசிக்கான செலவைதான் சேர்த்திருக்கிறார்கள். மற்றபடி சுகாதாரத் துறைக்கான செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.