ரிஷப் பண்ட் பணம் கொள்ளையா? ஆம்புலன்ஸில் ஏறியபோது ஒப்படைத்தோம்.. காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் பேட்டி
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ன் விபத்தில் சிக்கிய போது, அவரின் காரில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் ரிஷப் பண்டை காப்பாற்றி ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்த பேருந்து ஓட்டுநர், ரிஷப் பண்ட் பணம் மற்றும் காரில் இருந்து சிதறிய பொருட்கள் அனைத்து ஆம்புலன்ஸில் ஏறிய போது அவரிடம் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் நாடு திரும்பினார். நீண்ட நாட்களுக்கு பின் வீட்டிற்கு வந்த ரிஷப் பண்ட், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சொந்த வேலை காரணமாக தனது பென்ஸ் காரில் பயணித்துள்ளார்.
ஓட்டுநர் இல்லாமல் தானாகவே ஓட்டிச் சென்ற ரிஷப் பண்ட், ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன் தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் தனது காரில் டெல்லி புறப்பட்டுள்ளார். நள்ளிரவில் புறப்பட்ட ரிஷப் பண்ட், மீண்டும் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே காரை ஓட்டி வந்துள்ளார்.
அன்று சைரஸ் மிஸ்திரி.. இன்று ரிஷப் பண்ட்..! ரொம்பவே ஆபத்தானதாக மாறும் இந்திய சாலைகள்! என்ன பிரச்சினை
அதிவேகத்தில் வந்த ரிஷப் பண்ட்
தேசிய நெடுஞ்சாலையில் மங்களார் - நார்சன் பகுதிக்கு இடையே வந்துகொண்டிருந்த போது, காலை 5.30 மணியளவில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியதால், எதிர்முனைக்கு பறந்தது. இந்த விபத்தால் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
ரிஷப் பண்டை காப்பாறிய பேருந்து ஓட்டுநர்
இதனால் அதிர்ச்சியடைந்த ரிஷப் பண்ட், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு வேகமாக குதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் காரில் சீட் பெல்ட் அணியவில்லை. ஜன்னிலை உடைத்து வெளியே குதித்த ரிஷப் பண்டிற்கு முதுகு, தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ரிஷப் பண்டை, பேருந்து ஓட்டுநர் ஒருவர் தூக்கி பாதுகாப்பான இடத்தில் படுக்க வைத்துள்ளார்.
ரிஷப் பணம் கொள்ளை?
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்டிற்கு டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரிஷப் பண்டிற்கு விபத்து ஏற்பட்ட போது, அவரிடம் இருந்த பொருட்களையும், பணத்தையும் சிலர் திருடி சென்றதாக தகவல் வெளியாகியது. இதனையறிந்து ரசிகர்கள், இந்தியாவில் மனிதம் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு திட்டி வந்தனர்.
ரிஷப் பண்ட் பணம் ஒப்படைப்பு
இந்த நிலையில் ரிஷப் பண்டை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை பார்த்தேன். அவர் காரில் இருந்து வெளியேறி வந்த போது, பேருந்தை நிறுத்திவிட்டு அவருக்கு உதவி செய்தேன். பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் படுக்க வைத்திவிட்டு, ஆம்புலன்ஸை அழைத்தேன். ஆம்புலன்ஸ் வாகனம் வந்த பின், காரில் இருந்து சிதறிய பொருட்களையும், ரூ.7 ஆயிரம் பணத்தையும் அவரின் கைகளில் ஒப்படைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.