கையை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்" -பணமதிப்பு நீக்க வழக்கில்.. உச்ச நீதிமன்றம் காட்டமான விமர்சனம்
டெல்லி: "பொருளாதாரம் சார்ந்த முடிவு என்பதற்காக அது செயல்படுத்தப்படும் விதங்களை நாங்கள் கையை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பு நீக்கம் ஒரு பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என ரிசர்வ் வங்கி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்பு.. ஏன் முக்கியம்? என பத்திரிகை சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி!
இந்தியாவை உலுக்கிய நடவடிக்கை
2016-ம் ஆண்டு நவம்பர் 8. இந்தியர்கள் எவராலும் மறக்க முடியாத தேதி அது. திடீரென அன்றைய தினம் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். கருப்புப் பணத்தையும், லஞ்சத்தையும் ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத இந்த அறிவிப்பு, அடுத்தடுத்த நாட்களில் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியது. மக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காகவும், ரூபாயை எடுப்பதற்காகவும் வங்கி - ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
உச்ச நீதிமன்றம் விசாரணை
இதனிடையே, இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்த கறுப்பு பணமும் கைப்பற்றப்படவில்லை என்றும், பொருளாதாரத்தை சீரழித்ததை தவிர இந்நடவடிக்கையால் எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த சில வாரங்களாக விசாரித்து வருகிறது.
"நீதிமன்றம் தலையிட முடியாது"
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, "நாட்டின் நலன் கருதியும், பாதுகாப்பை கருதியுமே இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இதில் சட்டரீதியான அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. இதனை செயல்படுத்துவதில் சில இடையூறுகள் இருந்தது உண்மைதான். ஆனால் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. மக்களை பெரிதும் பாதிக்காத வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அனைத்துக்கும் மேலாக, இது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை. ஆதலால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என வாதிட்டார்.
"வேடிக்கை பார்க்க மாட்டோம்"
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு சில கொள்கை முடிவுகளை எடுக்கலாம். இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதே சமயத்தில், இந்த முடிவுகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகளில் நீதிமன்றங்களால் தலையிட முடியும். பொருளாதாரக் கொள்கைகள் எனக் கூறி எங்களை கட்டிப்போட முடியாது. அரசின் முடிவுகள் செயல்படுத்தப்படும் விதத்தை நாங்கள் கையை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்" என நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.