காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக காணொளி மூலம் மட்டுமே நடைபெற்று வந்த காவிரி மேலாண்மை கூட்டம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று டெல்லியில் நடைபெற்றது.
மத்திய நீர் வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் இதற்கு தலைமை தாங்கியுள்ளார். தமிழகம் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான, சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் வலியுறுத்தல்
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 86.38 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும். ஆனால், 30.6 டிஎம்சி தண்ணீர் பாக்கியுள்ளது. அதை வழங்க வலியுறுத்தியுள்ளது தமிழகம். அதே நேரம், கர்நாடகா மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக இருமுறை மத்திய அரசிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காவிரி மேலாண்மை ஆணையம்
இதனிடையே,காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3 மாதங்களாக பாக்கி வைக்கப்பட்டுள்ள, 30.6 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான தண்ணீரையும் வழங்க வேண்டும் என்று தனது உத்தரவில் காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி
வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், மேகதாது பற்றி பேசக் கூடாது என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. புதுச்சேரி சட்டசபை நேற்று மேகதாது அணைக்கு எதிராக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றியது. எனவே தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், கர்நாடகா வழங்க வேண்டிய குடிநீர் பற்றி மட்டும் இந்த கூட்டத்தில் பேசி வருகிறார்கள்.

கேரளா ஆதரவு
இதனிடையே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கேரள அரசு செயல்படும் என அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயனை, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கேரள அரசு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவோம் என கேரள முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications