கொரோனா களத்தில் மருத்துவ மாணவர்கள்.. சுகாதார பணியாளர்கள் அழுத்தத்தை குறைக்க.. மத்திய அரசு முடிவு
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளில், மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளது. இது நாட்டிலுள்ள சுகாதாரத் துறை கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் சுகாதார பணியாளர்கள் தினசரி 16 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் போதிய அளவில் சுகாதாரத் துறை ஊழியர்கள் இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளில், மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சுகாதார பணியாளர்களின் அழுத்தத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா சிகிச்சை பணிகளில் 100 நாட்கள் ஈடுபடுபவர்களுக்கு வரும் காலங்களில் அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக மருத்துவ மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நர்சிங் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிப்பவர்களையும் கொரோனா சிகிச்சை அளிக்கப் பயன்படுத்த மத்தி அரசு முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்போருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அரசுப் பணிகளில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.