கோவிஷீல்ட் டோஸ்களுக்கிடையே இடைவெளியை குறைக்கும் திட்டம் இல்லை.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையில் இடைவெளியை குறைக்கும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து நாடுகளும் மும்முரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன.

டோஸ் இடைவெளி
இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் வெவ்வேறு வகையிலான டோஸ் இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது. டோஸ் இடைவெளி என்பது ஒரு டோஸுக்கும் இன்னொரு டோஸுக்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.இந்தியாவில் கோவிஷீல்ட் வேக்சின் டோஸ்களுக்கு இடையில் தற்போது 12 முதல் 16 வாரம் வரை இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.

எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
கோவாக்சின் டோஸ்களுக்கு இடையில் 4 முதல் 6 வாரங்கள் இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு டோஸ் வேக்சினுக்கும் இன்னொரு டோஸ் வேக்சினுக்கும் இடையில் கூடுதல் இடைவெளி விடப்பட்டால் அதன் மூலம் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் இடைவெளி விடப்படுகிறது. பெரும்பான்மை நாடுகள் 4-6 வார இடைவெளியை மட்டுமே கொண்டு இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் கூடுதல் இடைவெளி அமலில் உள்ளது

திட்டம் இல்லை
இந்தியாவில் கோவிஷீல்ட் வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் முடிவில் மத்திய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கோவிஷீல்டுக்கான 84 நாள் டோஸ் இடைவெளியைக் குறைக்க எந்த திட்டமும் இல்லை என்று தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) தலைவர் என்.கே அரோரா இன்று தெரிவித்தார்.

மதிப்பாய்வு செய்யப்படும்
சுகாதார நிபுணர்களின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த ஆண்டு இரண்டு ஷாட்டுகளுக்கு இடையிலான இடைவெளி மூன்றாவது முறையாக மதிப்பாய்வு செய்யப்படும் என்று அவர் கூறினர். இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம் இடைவெளியைக் குறைக்க பரிந்துரைத்துள்ள நிலையில் என்.கே அரோரா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications