முரண்டு பிடிக்கும் டுவிட்டர்... சமூக வலைத்தளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுக்கும் சாட்டை!
டெல்லி: டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்கள், OTT தளங்கள் மற்றும் செய்தி தொடர்பான வலைத்தளங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை அகற்ற சமூக வலைத் தளங்களுக்கு 36 மணிநேரம் கேடு விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டெல்லி போராட்டங்கள் பற்றிய கருத்துக்களை நீக்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிறுவனத்துக்கும் கடும் மோதல் உருவாகி உளள்து.
திசைமாறிய பேரணி
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே குடியரசு தினம் அன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின் போது விஷமிகள் புகுந்ததால் பேரணி திசை மாறி வன்முறை மூண்டது. இதில் தொடர்புடையவர்களை டெல்லி போலீசார் கைது செய்து வருகின்றனர்.
டுவிட்டர் நிறுவனம் மறுப்பு
டெல்லி போராட்டங்கள் பற்றிய தவறானதும், ஆத்திரமூட்டக்கூடியதுமான கருத்துக்கள், டுவிட்டரில் பல்வேறு தரப்பினரால் பதிவிடப்பட்டன. இதைக்கண்ட மத்திய அரசு, 1,178 டுவிட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என்று கடந்த 4-ந் தேதி டுவிட்டர் நிர்வாகத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் டுவிட்டர் 500 கணக்குகளை மட்டும் முடக்கியது. மேலும் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு எச்சரிக்கை
இதனால் இந்திய டுவிட்டர் உயர் அதிகாரிகள் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்றும், அப்படி இலை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்தார்.
வரைவு விதிகள் வருகிறது
இந்த நிலையில் டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்கள், OTT தளங்கள் மற்றும் செய்தி தொடர்பான வலைத்தளங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரைவு விதிகளில் கடுமையான நெறிமுறைகள் இருக்கும் என்று என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
36 மணிநேரம் கெடு
சட்ட அமலாக்க நிறுவனங்களிடம் இருந்து வரும் புகார்களை தொடர்ந்து கண்காணிக்கவும் பதிலளிக்கவும் ஒரு தலைமை அதிகாரி நியமிக்கபட உள்ளார். ஒரு குறை தீர்க்கும் போர்டல் அமைக்கப்படும் என்று என்டிடிவி ஆதாரங்களை மேற்கோள் காட்டி கூறியுள்ளது. இந்த வரைவில் எந்த தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை அகற்ற சமூக வலைத் தளங்களுக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி தவறும் பட்சத்தில் 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.