சு.சுவாமியின் ராமர் பாலம் புராதன சின்ன கோரிக்கை- விரைவில் முடிவு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோருவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதனையடுத்து ராமர் பாலம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமி வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தியை இணைக்க கூடிய மணற்திட்டுகள் அல்லது சுண்ணாம்பு பாறைகள் ஒரு தொடர்ச்சியாக இருக்கின்றன. இது ஒரு பாலம் போன்ற தோற்றத்தைக் கொண்டது. இதுதான் ஆடம் பாலம், ஆதாம் பாலம், ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.
ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்!
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படுகிற கடவுள் ராமர் கட்டிய பாலம் இது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நிலையில் தமிழ்நாட்டில், இந்த மணற்திட்டு பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கால்வாய்தான் சேது கால்வாய் அல்லது சேது சமுத்திர திட்டம் எனப்படுகிறது.
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள், ராமர் கட்டிய பாலத்தை இடித்து சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதா? என கொந்தளித்தன. 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் சேது கால்வாய் திட்டம் கைவிடப்பட்டது.
அப்போது, ராமர் பாலம் ஒரு புராதன சின்னம் என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அறிவித்தது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு, சேது கால்வாய் அல்லது சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராமர் பாலம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை சுப்பிரமணியன் சுவாமி தரப்பு ஏற்க மறுத்தது. ஆனால் மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைப்பதாக அறிவித்தது. மத்திய அரசு, இதில் முடிவு எடுக்காவிட்டால் சுப்பிரமணியன் சுவாமி தரப்பு மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.