மீண்டும் வாலாட்டும் சீனா.. அருணாச்சல பிரதேச எல்லையில் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துகிறது! பகீர் தகவல்
டெல்லி: இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள எல்லையில் சீனா தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. போர் சூழலை கையாளும் வகையில் இந்த பணி நடக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கான வழிமுறையை இந்திய ராணுவம் கட்டமைத்து வருகிறது.
இந்தியா-சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்த வேளையில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொள்வதும் நடந்துள்ளது. இதனால் இருநாடுகளின் உறவு சுமூகமாக இல்லை.
மேலும் சீனா தொடர்ந்து சதிகார வேலைகளில் ஈடுபட்டு எல்லையில் உள்ள இந்திய தொழில்நுட்பங்களை முடக்கவும் முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. இது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதனால் இருநாட்டு ராணுவங்களும் எல்லையில் எப்போதும் உஷாராகவே உள்ளன.

2020ல் எல்லை மோதல்
2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தியா-சீன எல்லையில் அவ்வப்போது பதற்றமும் நிலவி வருகிறது.

இந்திய படைப்பிரிவு தளபதி
இந்நிலையில் தான் இந்தியாவின் அருணாச்சல் பிரதேசம் எல்லை பகுதிகளில் சீனா வாலாட்டி வருகிறது. குறிப்பாக அருணாச்சல் பிரதேசம் பகுதியில் சீனா தனது எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இதுபற்றி இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தளபதியும், லெப்டினன்ட் ஜெனரலுமான ஆர்பி கலிதா கூறியதாவது:

உள்கட்டமைப்பு மேம்பாடு
அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே சீனா கட்டுமான பணிகளை மேம்படுத்தி வருகிறது. போர்ச்சூழலை சந்திக்கும் வகையில் படைகளை அனுப்பி வைக்க ஏதுவாக சாலை, ரயில் வான்வழி போக்குவரத்துக்கான வசதிகளை மேம்படுத்துகிறது. மேலும் எல்லை கட்டுப்பாட்டு கோடுகளையொட்டி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொடர் கண்காணிப்பு
எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கான வழிமுறையை இந்திய ராணுவம் மேம்படுத்தி வருகிறது. இது இந்தியாவை எல்லையில் வலுவானதாக மாற்றியுள்ளது. எல்லையில் உள்ள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். செல்போன் 5ஜி சேவையையும் அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

பிரச்சனைக்கு வழிவகுக்கும்
இந்தியா - சீனா இடையே மக்மேகான் எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதிகளிலும் நமக்கும், சீனாவுக்கும் வெவ்வேறான பார்வை உள்ளது. இது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எல்லையை முறையாக நிர்ணயம் செய்த பிறகு பிரச்சனை இருக்காது. எல்லையொட்டி ஊடுருவல் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications