மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் சீனாவுக்கு தொடர்பு? ஷாக் தகவல்
டெல்லி: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் சீனாவுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Recommended Video
மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் நாட்டு எல்லையில் புதன்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை பிரிவை சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

3 அமைப்புகள் பொறுப்பேற்பு
இந்த தாக்குதலுக்கு மக்கள் விடுதலை ராணுவம்- PLA, மணிப்பூர் நாகா மக்கள் முன்னணி -MNPF, உல்பா-ஐ (ULFA-I) ஆகியவை இணைந்து பொறுப்பேற்றுள்ளன. மணிப்பூரில் திடீரென படையினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சீனாவின் ஆயுதம், பயிற்சி
வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் தனிநாடு கோரும் பிரிவினைவாத, பயங்கரவாத குழுக்கள், மியான்மர், வங்கதேசத்தில் முகாம்கள் அமைத்திருக்கின்றன. இந்த தனிநாடு கோரும் குழுக்களுக்கு சீனாதான் முழு அளவில் ஆயுதங்களை விநியோகித்து வருகிறது. ஆயுத பயிற்சியும் சீனாவே தருகிறது.

மியானர் சர்ஜிகல் ஸ்டிரைக்
இத்தகைய பயங்கரவாத முகாம்களை ஏற்கனவே மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் அழித்தது. இதன்பின்னர் நீண்டகாலம் அமைதியாக இருந்த பயங்கரவாதிகள் இப்போது திடீரென இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் பி.எல்.ஏ.
லடாக், சிக்கிம், இமாச்சல பிரதேசம் என எல்லைகள் நெடுகிலும் வாலாட்டிக் கொண்டிருக்கும் சீனாவின் தூண்டுதலில்தான் இந்த பயங்கரவாத இயக்கங்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கக் கூடும் என்கின்றன ராணுவ வட்டாரங்கள். குறிப்பாக மணிப்பூரை மையமாக கொண்டு செயல்படும் மக்கள் விடுதலை ராணுவத்துக்கு ஆயுத பயிற்சியை சீனா ராணுவம்தான் கொடுத்து வருகிறது.

சீனாவில் இருந்து வந்த குழு
அண்மையில் சீனாவில் ஆயுத பயிற்சியை முடித்த மணிப்பூர் பயங்கரவாதிகள் குழு ஒன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த அணிதான் தாக்குதலை நடத்திவிட்டு மியான்மருக்குள் ஓடி பதுங்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வடகிழக்கில் ராணுவம் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வடகிழக்கு மாநில எல்லைகள் முழுவதுமே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications