கொரோனா வைரஸ்... இருதயத்தையும் பாதிக்கிறதா... சீன ஆய்வில் அதிர்ச்சி!!
டெல்லி: சீனாவில் ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. துவக்கத்தில் இந்த தொற்றால் உடலின் பாகங்கள் பாதிக்கப்படலாம் என்று தெரிய வந்து இருந்தது. ஆனால், தற்போது இந்த வைரஸ் தொற்றால் இருதயமும் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவு ஜமா கார்டியாலஜி என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இதில் கொரோனாவுக்குப் பின்னர் 78% பேர் இருதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளது. முதல் நாள் தொற்று ஏற்பட்டவுடன் இந்த பாதிப்பு சிலருக்கு இருக்கலாம். அவர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியாது.
மூச்சுத் திணறல், இருதயத்தில் சிக்கல், தசையில் மாற்றம் மற்றும் வீக்கம் என இருதயத்தில் பெரிய பாதிப்பு இருக்கும். இதற்கு முன்பு இருதய பாதிப்பு இல்லையென்றாலும் இந்த பாதிப்புகள் இருக்கும். இருதய பாதிப்புக்குப் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பும் அதிகரிக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சிடிசி வார இதழ் நடத்திய ஆய்வில், ''கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 22% பேர் இருதய பாதிப்பால் இறந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்று மேதந்தா இருதய மருத்துவமனையின் தலைவர் மற்றும் மேலாளர் டாக்டர் நரேஷ் ட்ரெஹன் தெரிவித்துள்ளார்.
கோவாக்சின்... குரங்கு பரிசோதனையில்... அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி... முழு வெற்றி!!
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், '' வயது பொருத்து கொரோனாவின் தாக்கமும் இருக்கும். வேறு உடல் உபாதைகள் இருப்பவர்களை இந்த நோய் அதிகளவில் பாதிக்கும். நீண்ட மற்றும் குறுகிய கால பாதிப்பு குறித்த ஆய்வு இன்னும் நடந்து வருகிறது. இதன் முடிவு வெளியாகும்பட்சத்தில், இருதயமும் பாதிக்கப்படுமா என்பது தெரிய வரும். நீண்ட நாட்களில் இருதயமும் பாதிக்கப்படும்.
முன்பு இருதய நோய் இருப்பவர்களுக்கு கொரோனா கூடுதல் சிக்கல்களை உருவாக்கும். இருதய செயல்பாட்டை இது குறைக்கும். வீக்கம் ஏற்படும். வைரஸ் நேரடி பாதிப்பால் நுரையீரலில் அதிக அழுத்தம் ஏற்படுவது மற்றும் இருதயத்தில் வீக்கம் ஏற்படுவது இரண்டும் இருதய பாதிப்புக்கு காரணமாகின்றன'.
மூச்சு விடுதலில் சிரமமாக இருந்தால், நெஞ்சில் வலி அல்லது அழுத்தம் இருந்தால், குழப்பமாக இருந்தால், முகம் மற்றும் உதடு இரண்டின் நிறம் ப்ளூவாக மாறி இருந்தால், ஆக்சிஜன் குறைந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் மிதமான அல்லது மோசமான பாதிப்பு இருந்தவர்களுக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். இத்துடன், தலைச்சுற்றல், எலும்பு இணைப்புகளில் வலி, நெஞ்சு வலி ஆகியவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.