சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு.. விசாரிக்க விரும்பலை.. விலகினார் தலைமை நீதிபதி
டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிக மிக முக்கியமான சுயேச்சையான துறைகளில் மிக முக்கியமானது சிபிஐ. இதன் இயக்குநராக இருந்தவர் அலோக் வெர்மா.
ஆனால் இவரது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு அதிரடியாக ராகேஷ் அஸ்தானாவை சிறப்பு இயக்குநராக நியமித்தது.
அதிகார மோதல்
இருவருக்கும் இடையே அதிகார மோதல் வெடித்ததைத் தொடர்ந்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. இதை எதிர்த்து அலோக் வெர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின் உத்தரவை செல்லாது என்று அறிவித்தது. இதனால் அலோக் வெர்மா மீண்டும் இயக்குநரானார்.
கோர்ட்டில் வழக்கு
ஆனால் அலோக் வெர்மாவை அதிரடியாக இடமாற்றம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு உத்தரவிட்டது. தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரிக்க மறுப்பு
அப்போது சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் தான் உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்துவிட்டார். வேறு அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று சொல்லி இந்த வழக்கை ஏற்று நடத்த மறுப்பு தெரிவித்த நீதிபதி, வரும் 24-ம் தேதி 2-வது அமர்வு விசாரிக்கும் இதனை விசாரிக்கும் என்று சொல்லி ஒத்தி வைத்தார். சிபிஐ இயக்குநர் நியமனத்தில் வெளிப்படையான தன்மை தேவை என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
பெரும் அதிர்ச்சி
நாளை புதிய சிபிஐ இயக்குனரை நியமிக்க, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடக்க உள்ள நிலையில் தலைமை நீதிபதியின் இந்த அதிரடி முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அலோக் வெர்மா இடமாற்ற முடிவை எடுத்த பிரதமர் மோடி கூட்டத்தில் நீதிபதி ரஞ்சன் கோகோய் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.