ரப்பர்,மேகி விலை ஏறி போச்சு.. பென்சிலை திருடிட்டாங்க! பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி! யாரும்மா நீ?
டெல்லி : ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவை காரணமாக பென்சில் ரப்பர் மற்றும் மேகி நூடுல்ஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்து விட்டதாகவும், விலைவாசி உயர்வுக்கு நீங்கள் காரணமாகிவிட்டீர்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்கள் 2 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் லாட்டரி ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்கும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் புதன்கிழமை ஒத்திவைத்துள்ளதோடு, பள்ளிக்குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஹஜ் பயணத்துக்கு 5% ஜிஎஸ்டி.. விலக்கு கோரி தனியார் பயண நிறுவனங்கள் வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
ஜிஎஸ்டி வரி
குறிப்பாக பென்சில் ஷார்ப்பனர், ரப்பர், பிளேடு, கத்தி, எல்இடி விளக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 18% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நோட்டு, ஸ்டேஷனரி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு இல்லைலாத நிலையில், நடப்பாண்டு ஜிஎஸ்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 20 முதல், 25 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
பென்சில் விலை உயர்வு
5 ரூபாய் வரை விற்கப்பட்ட பென்சில், ரப்பர், ஷார்ப்பனர் ஆகியவற்றின் விலை தற்போது 2 முதல் 3 ரூபாய் வரை தரத்திற்கேற்ப விலை உயர்ந்துள்ள நிலையில், கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் மாணவி ஒருவரின் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதோடு, பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
மாணவி கடிதம்
உத்த பிரதேச மாநிலம் கண்ணோஜ் மாவட்டத்தின் அருகே உள்ள சிப்ரமாவ் என்ற ஊரைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவியான கிரித்தி டுபே என்ற மாணவி தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியில் எழுதியுள்ள அந்த கடிதத்தில் 'வணக்கம் எனது பெயர் கிரித்தி டுபே, நான் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறேன் மோடி ஜி என் பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு நீங்கள் காரணமாகி விட்டீர்கள். நான் சாப்பிடும் மேகியின் விலையும் அதிகரித்துள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் என்னை அடிக்கிறார் நான் என்ன செய்வது மற்ற குழந்தைகள் என் பென்சிலை திருடுகிறார்கள்" என எழுதியுள்ளார்.
மகளின் மன் கி பாத்
தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து பேசிய சிறுமியின் தந்தை "இது என் மகளுடைய மன் கி பாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்தில் பென்சிலை கிரித்தி டுபே தொலைத்ததால் அவரது தாயார் திட்டியதாகவும் அதன் காரணமாக எரிச்சல் அடைந்து இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்" எனக் கூறியுள்ளார். இந்த கடிதத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.