நீட் தேர்வு தொடர்பான பிரச்சினையை அழுத்தமாக பதிவு செய்தேன்.. முதல்வர் ஸ்டாலின்
டெல்லி: நீட் தேர்வு தொடர்பான பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடியிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் அழுத்தமாக பதிவு செய்தேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பாரத பிரதமர் நரேந்திர மோடியை இன்று மதியம் சந்தித்தேன். எனக்கு உடனடியாக நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி.
முதல்வராக பதவியேற்ற பிறகு 3ஆவது முறையாக நான் டெல்லிக்கு வந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தேன். கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இலங்கை பிரச்சினை
பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் உள்ளது. பிரதமரிடம் நான் அளித்த கோரிக்கைகள் மனுக்கள் உங்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் குறிப்பிட்ட சில முக்கியமான கோரிக்கைகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக் கொண்டிருக்கக் கூடிய இலங்கை தமிழர்களுக்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். தேவையான அத்தியாவசிய பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகளை வழங்க உதவ அனுமதி அளிக்க வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கும் சம உரிமை, அரசியலில் உரிமை ஆகியவற்றை வலியுறுத்தினேன்.

மீன்பிடி
அது போல் பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் குறித்தும் கச்ச தீவை மீட்பது குறித்தும் தெரிவித்தேன். உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் பயில் வழி வகை செய்ய வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. நீட் தேர்வு தொடர்பான பிரச்சினையை அழுத்தமாக பதிவு செய்தேன்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா
அது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். அவரிடம் நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக ஆளுநர் ரவி கிடப்பில் போட்டிருப்பது குறித்து தெரிவித்தேன். மேலும் நீட் விலக்கு மசோதாவை 2ஆவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதையும் தெரிவித்தேன்.

வெள்ள நிவாரண நிதி
மேலும் தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்பது குறித்தும் காவல் துறை , தீயணைப்பு துறைகளை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் கோரிக்கை வைத்தேன். இதையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தேன். அப்போது அவரிடம் தமிழகத்தில் புதிய விமான நிலையங்களை அமைக்க பாதுகாப்பு துறையின் நிலங்களை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

பாதுகாப்பு துறை அமைச்சர்
தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வு கூடம் அமைப்பது குறித்தும் கோவையில் ஏவியேஷன் டெக்னாலஜி ஹப் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தேன். அவரிடம் சென்னை- கன்னியாகுமரி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

நிதின் கட்கரியுடன் சந்திப்பு
சென்னை- மதுரவாயல் மேல் மட்ட பாலத்தை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க வேண்டும். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் புதிய நெடுஞ்சாலை திட்டங்களை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். டெல்லி அரசு பள்ளிகளை முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிடவுள்ளேன். இன்றைய தினம் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோருடனான சந்திப்பு மன நிறைவை அளித்துள்ளது. நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications