உ.பி.யில் புதிய வாக்காளர்களை கவர வியூகம்.. 'இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை'யை வெளியிட்ட காங்கிரஸ்!
டெல்லி: உத்தரபிரதேச 'இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை' எனப்படும் தொலைநோக்கு ஆவணத்தை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.
விடாமல் சீண்டப்படும் தனுஷ் - ஐஸ்வர்யா.. புற்றீசல் போல சுற்றிய யூ டியூப் சேனல்கள்.. ஏன் இந்த வன்மம்?
உத்தரபிரதேச தேர்தல் களம்
தற்போது உ.பி.யில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மிக தீவிரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. வேட்பாளர்களை அறிவித்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை இந்த கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன.
காங்கிரஸ் தீவிரம்
உ.பி.யில் இந்த முறை கண்டிப்பாக ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று காங்கிரஸ் ஏற்கனவே பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி ஓராண்டுக்கும் மேலாக உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு காங்கிரசுக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்து வந்தார்.
இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை
இந்த நிலையில் ' உத்தரபிரதேச இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை' எனப்படும் தொலைநோக்கு ஆவணத்தை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ' உ.பி.யில் இன்று பல ஆயிரம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். அனைத்து வேலைகளும் 2-3 தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுவதே இதற்குக் காரணம். எனவே, உபி இளைஞர்களிடம் பேசி, உங்களுக்கு எப்படி வேலைகளை உருவாக்குவது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு ஒரு புதிய பார்வை தேவை என்பது எங்கள் புரிதல் மற்றும் எங்கள் நம்பிக்கை. இந்தியாவின் புதிய பார்வைக்கு, நீங்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து தொடங்குங்கள்' என்று கூறினார்.
இளைஞர்கள் சந்திக்கும் சிரமம்
''இளைஞர்கள் சந்திக்கும் சிரமங்களையும், அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பதையும் பார்த்தோம். எல்லா அரசியல் கட்சிகளும் வந்து வேலை - 25 லட்சம் வேலைகள், 30 லட்சம் வேலைகள் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள், ஆனால் அதை எப்படிச் செய்வார்கள் என்பதை யாரும் விரிவாக விளக்கவில்லை. இந்த இளைஞர் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அதைச் செய்துள்ளது'' என்று பிரியங்கா காந்தி கூறினார்.
வேலைவாய்ப்பைப் பெற உதவும்
''உ.பி.யில் உள்ள இளைஞர்கள் வேலை கிடைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அவர்கள் தகுதியுடையவர்களாக உள்ளனர். ஆனால் வேலையில்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்கள் விரும்பும் மற்றும் தேவையான வேலைவாய்ப்பைப் பெற உதவுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். தேர்வின் போது இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தேர்வுகள் மற்றும் அட்டவணைகளை மனதில் வைத்து, வேலை காலண்டரை உருவாக்க வேண்டும். முக்கியமான விஷயம் மற்றும் மிகவும் தேவை. உத்தரபிரதேசத்தில் ஆண்டுதோறும் ஒரு இளைஞர் விழாவை ஏற்பாடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்' என்றும் பிரியங்கா கூறினார்.