மாதந்தோறும் அர்த்தமற்று பேசுவதால் வைரஸை வீழ்த்தமுடியாது..மோடியின் மன் கி பாத்-ஐ கிண்டல் செய்த ராகுல்
டெல்லி: மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்று பேசுவதால் மட்டும் கொரோனவை எதிர்த்து போராட முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் மெல்ல, மெல்ல குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது.
கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு
சில வாரங்களுக்கு முன்பு 3,00,000 லட்சத்தை கடந்து சென்று பீதியை ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு தற்போது 2,00,000-க்குள் அடங்கி விட்டது.
மன் கி பாத் நிகழ்ச்சி
கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்தது. மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களிடம் உரையாற்றி வரும் பிரதமர் மோடி இன்றும் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேச்சு
அப்போது கூறிய அவர், ' உலக நாடுகள் அனைத்துக்கும் பொது எதிரியான கொரோனாவை இந்தியா தனது முழு பலத்தோடு எதிர்கொண்டு வருகிறது. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் ஆக்சிஜன் தேவை இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் தேவை நமக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் விமானப்படையினர், டிஆர்டிஓ பணியாளர்கள், ரயில்வே பணியாளர்கள் மூலம் நாம் இதனை சமாளித்துள்ளோம். கொரோனா தடுப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளபட்டன ' என்று மோடி பேசினார்.
ராகுல் கிண்டல்
மேலும் மத்திய அரசின் 7 வருட சாதனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்டு கூறினார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் மன் கி பாத் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடுமையாக கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ' கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட, உங்களுக்கு சரியான எண்ணம், கொள்கை, உறுதிப்பாடு தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்று பேசும் பேச்சுகளால் கொரோனாவை எதிர்த்து போராட முடியாது' என்று ராகுல் கூறியுள்ளார்.
நெட்டிசன்கள் வரவேற்பு
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஒருசிலர் வரேவேற்பும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 'இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இந்த அளவுக்கு வந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம். நான் ஏற்கனவே 2-வது அலை வரும் என எச்சரித்தும் பிரதமர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை' என்று ராகுல் காந்தி ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.