ராகுலுக்கு ஆதரவாக குதித்த காங்.. நாடு முழுக்க நாளை அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம்.. பிளான்!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்காக நாளை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உள்ள நிலையில், தங்களது பலம் என்ன என்பதை காட்ட காங்கிரஸ் தயாராகி வருகிறது. நாடு முழுக்க நாளை அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்கு பரிமாற்ற வழக்கில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளதாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜராகுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு என்ன?
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தில் இருந்து நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகியது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பாக ரூ.90 கோடி கடன் கொடுக்கப்பட்டது. இருந்தும் அந்த பத்திரிகை செயல்படாமல் நிறுத்தப்பட்டது. இதன்பின் கடந்த 2010ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவன பங்குகள், யங் இந்தியா என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி குடும்பத்தினரிடம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சுப்ரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அன்னிய செலாவணி பணமோசடி நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் திட்டம்
இந்தநிலையில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராகவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் தங்களது பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதுகின்றனர். இதனால் நாளை ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கிளம்பும் போது, மூத்தத் தலைவர்கள் அவருடன் பேரணியாக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள சுமார் 25 அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
இதுகுறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் கூறுகையில், மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்காக பாஜக அரசு விசாரணை நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் மூக்கியத் தலைவர்கள் போலி வழக்கில் சிக்க வைக்க அரசு செய்திருக்கும் சதியே இந்த வழக்கு. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர், அவர்களின் அரசியல் எதிரிகளை பழிவாங்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் எங்களை பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது. இதுவொரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டம் எதற்கு?
நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான குரல்கள் எங்கிருந்தெல்லாம் வருகிறதோ, அந்த மாநிலங்களில் உள்ள தலைவர்களின் வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் மூலம் சோதனைகள் செய்யப்படுகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற பாஜகவின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.