மதமோதலில் இறந்த தாய்.. அம்பேத்கர் பாணியில் புத்த மதத்தில் நாட்டம்!மல்லிகார்ஜூன கார்கேவின் மறுபக்கம்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கே, தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் சட்டமேதை அம்பேத்கரின் தீவிர பற்றாளராக உள்ளார். 7 வயதில் வகுப்புவாத மோதலில் தாயை இழந்த இவர் வழக்கறிஞராகி புத்த மதத்தை பின்பற்றி பாஜகவுக்கு எதிரான சித்தாந்தத்துடன் காங்கிரஸில் செயல்பட்டு வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ல் நடைபெற்றது.
இதில் சோனியா காந்தியின் ஆதரவுடன் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து சசிதரூர் போட்டியிட்டார்.

மல்லிகார்ஜூன கார்கே வெற்றி
தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 9900 பேர் ஓட்டளித்தனர். இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சோனியா காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளரான மல்லிகார்ஜூன் கார்கே 7,897 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசீதரூர் வெறும் 1,072 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 416 ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வகுப்புவாதத்தில் தாயை இழந்த கார்கே
மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவை சேர்ந்தவர். ஐதரபாத்-கர்நாடாக என அழைக்கப்படும் பீதர் மாவட்டம் வாராவட்டி கிராமத்தில் 1942 ஜூலை 21ல் பிறந்தார். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் தனது 7 வயதில் வகுப்புவாத வன்முறையால் தனது தாயை இழந்தார். இதையடுத்து அவரது குடும்பம் வாராவட்டி கிராமத்தில் இருந்து கலபுரகி மாவட்டத்துக்கு குடிபெயர்ந்தது. இந்த வகுப்புவாத மோதல் சம்பவம் கார்கேவை அதிகமாக பாதித்ததாக கூறப்படுகிறது.

புத்த மதத்தை பின்பற்றுபவர்
இதனால் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக அவர் செயல்பட துவங்கினார். சட்டமேதை அம்பேத்காரை பின்பற்றி வந்த அவர் வழக்கறிஞருக்கு படித்தார். மேலும் அம்பேத்கார் வழியில் மல்லிகார்ஜூன கார்கே பவுத்த மதத்தை பின்பற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ராதாபாய். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். ராகுல் கார்கே, பிரியங்க் கார்கே, மிலிந்த் கார்கே என்ற 3 மகன்கள் உள்ளன. பிரியதர்ஷினி மற்றும் ஜெயஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.

டாக்டர்- அரசியல்வாதியாக வாரிசுகள்
மகள்கள் இருவரும் டாக்டர்கள் ஆவார்கள். இதில் 2வது மகனான பிரியங்க் கார்கே காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர் கர்நாடக முதல்வராக சித்தராமையாக இருந்தபோது மருத்துவக்கல்வி அமைச்சராகவும் இருந்தார். மூத்த மகன் ராகுல் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த நிலையில் அதனை ராஜினாமா செய்தார். தற்போது இந்திய அறிவியல் கழகத்தில் விஞ்ஞானியாக உள்ளார். இன்னொரு மகன் மிலிந்த் கார்கே வெளிநாட்டில் படித்து தனியார் துறையில் பணியாற்றி வருகிறார்.

விளையாட்டில் ஆர்வம்
இவர் கன்னடம் தவிர உருது மற்றும் இந்தியில் சரளமாக பேசும் திறன் கொண்டவர். மேலும் மராத்தி மொழியும் நன்றாக பேசுவார். இவர் கபடி மற்றும் ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கினார். கால்பந்து, கிரிக்கெட் விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டவர். மேலும் கிரிக்கெட் போட்டிகளை மைதானத்துக்கே சென்று அடிக்கடி ரசிக்கும் நபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக-ஆர்எஸ்எஸ்சுக்கு எதிர்ப்பு
மேலும் இவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸூம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என பல மேடைகளில் வெளிப்படையாக மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் கட்சி மேலிடமான சோனியா காந்தி மீது பல மூத்த தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் கூட மல்லிகார்ஜூன கார்கே விசுவாசமாகவே இருந்தார். பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் எதிரான சித்தாந்தத்தால் தான் மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து சோனியா காந்தியுடன் விசுவாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது அவர் சோனியா காந்தியின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நெடிய அரசியல் அனுபவம்
மல்லிகார்ஜூன கார்கே கடந்த 1972 முதல் 2008 வரை 1972, 1978, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008 வரை நடந்த சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்றார். கர்நாடகாவில் பல முறை அமைச்சராக இருந்த இவர் 3 முறை முதல்வர் வாய்ப்பு வந்தாலும் இறுதி நிமிடங்களில் மாறிப்போனது. அதன்பிறகு 2009ல் தான் தேசிய அரசியலில் அவர் நுழைந்தார். 2009ல் நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். அன்பிறகு 2014ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றாி பெற்றார். இதன்மூலம் 9 சட்டசபை, 2 நாடாளுமன்றம் என மொத்தம் 11 தேர்தலில் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றார். இருப்பினும் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம், மல்லிகார்ஜூன கார்கே தோல்வியடைந்தார். இதையடுத்து 2020ல் மாநிலங்களை எம்பியானார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவராகி உள்ளார்.












Click it and Unblock the Notifications