காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் யார்? நாளை தேர்தல்- கர்நாடகாவில் வாக்களிக்கிறார் ராகுல்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளைய தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் நியமிக்கப்படவில்லை.
குலுங்கிய பல்லாரி.. ராகுல் யாத்திரையில் கடல் போல கூட்டம்! திடீர்ன்னு பார்த்தா
நாளை தேர்தல்
காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் இல்லாமல் போனதால் அக்கட்சியில் பெரும் புகைச்சல் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்; பலர் காங்கிரஸுக்கே குட்பை சொல்லிவிட்டனர். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
களத்தில் கார்கே- சசி தரூர்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். நாளைய வாக்குப் பதிவுக்கு அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் யார்?
நாளை நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் மாவட்டங்களின் தலைவர்கள், காங்கிரஸ் மாநில கமிட்டிகளின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அனைவருக்கும் கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. வாக்களிக்க செல்வோர், உரிய வாக்காளர் அடையாள அட்டையுன்தான் செல்ல வேண்டும்.
அக்.19-ல் வாக்கு எண்ணிக்கை
வாக்களித்து முடிந்த பின்னர் வாக்குச் சீட்டு பெட்டிகள் சீல் வைக்கப்படும். மாநிலங்களில் இருந்து அனைத்து வாக்குச் சீட்டு பெட்டிகளும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். அனைத்து வாக்குகளும் வரும் 19-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் வாக்களிக்க உள்ளார்.