ஹெலிகாப்டர் விபத்தில் கருகிய உடல்கள்.. டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரம்!
டெல்லி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக விமானத்தில் அவர்கள் சென்றனர்.
வெலிங்கடன் பயிற்சி மைய ஹெலிபேடை நெருங்க 10 கி.மீ. தூரம் இருந்த நிலையில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமுக்கு சென்றபோதுதான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் இருந்த நிலையில் விபத்து நடந்துள்ளது.
அந்த பகுதி முழுவதும் கடும் பனிமூட்டமான சூழல் நிலவிய நிலையில், இதன் காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மொத்தம் 14 பேரில் 13 பேர் உயிரிழந்து விட்டனர். விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அவர்கள் யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது நீடிக்கிறது. எனவே உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தகவல்ககள் கூறுகின்றன.
நீலகிரி: ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு!