இதுதான் முதல் அறிகுறி.. ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஆபத்தானது.. ஏன்? இனி என்ன நடக்கும்?
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது மிகவும் ஆபத்தானது ஆகும்.
டெல்லி: டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது மிகவும் ஆபத்தானது ஆகும். இதனால் வரும் நாட்களில் இந்தியாவில் பல பிரச்சனைகள் நடக்க வாய்ப்புள்ளது.
Recommended Video
பொதுவாக உலகம் பேரிடர்களை சந்திக்கும் போதும், போர்களை சந்திக்கும் போதும் மக்களின் மனநிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பேரிடர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும், உயிர் சேதங்களும் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் . அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் தருணங்கள் உருவாகும்.
இன்னும் சிலர் சட்டங்களை கையில் எடுப்பது, கலவரத்தில் ஈடுபடுவதும் கூட நடக்கும். பொதுவாக பேரிடர்களை விட இதுதான் உண்மையில் ஆபத்தான விஷயம்.
தற்போதும் அதுதான் நடக்கிறது
அந்த வகையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் இந்தியாவிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சம் காரணமாக தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் டெல்லியில் இருந்து 2 லட்சம் பேர் உத்தர பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். டெல்லியில் வேலை இல்லாத காரணத்தால் தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.
எப்படி பயணம் செய்கிறார்கள்
முக்கியமாக இவர்கள் நடந்தே டெல்லியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டள்ளது. சிவில் வார் நடக்கும் சமயங்களில் மக்கள் இப்படித்தான் கூட்டம் கூட்டமாக உள்நாட்டு அகதிகள் போல வெளியேறுவார்கள். கிரேட் பிளேக் நோய் தாக்கிய போதும் மக்கள் இப்படித்தான் இடம் பெயர்ந்தனர். இரண்டாம் உலகப் போரிலும் இதுதான் நடந்தது. தற்போது இந்தியாவிலும் கொரோனா காலத்தில் இதுதான் நடக்கிறது.
மக்கள் முதலில் வெளியே செல்வார்கள்
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மாநில அரசு மீதும் மத்திய அரசு மீதும் நம்பிக்கை இழப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது . மக்கள் அரசு மீது நம்பிக்கை இழப்பதற்கான முதல் அறிகுறிதான் இந்த டெல்லி இடம்பெயர்வு. டெல்லியில் இருந்தால் வாழ முடியாது. நாம் சொந்த காலில் நிற்க வேண்டும். அரசு உதவாது என்று இவர்கள் எல்லாம் உத்தர பிரதேசம் செல்கிறார்கள். டெல்லியில் மட்டுமல்ல. கேரளா, கர்நாடகாவில் இருந்து கூட இப்படி பலர் வெளியேறுகிறார்கள்.
21 நாட்கள் என்பது கஷ்டம்
இந்த வெளியேற்றம் என்பது முதலில் சுகாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வெளியேற்றம் காரணமாக வடமாநிலங்களில் இப்போதே மக்கள் 21 நாள் ஊரடங்கை மீறி விட்டனர். அங்கு மக்கள் இப்படி கூட்டமே வெளியே செல்வது கொரோனா பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா இதனால் வட இந்தியாவில் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. 21 நாட்கள் மக்கள் இந்த ஊரடங்கை கடைபிடிப்பது மிகவும் கஷ்டம்.
மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்
அதற்கு அடுத்தபடியாக மக்கள் தங்கள் எதிர்காலம் மீது நம்பிக்கை இழப்பார்கள். அடுத்த வேளை உணவு இருக்கும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. இன்று வேலைக்கு போய் 200 ரூபாய் சம்பாதித்தால்தான் உணவு என்ற நிலையில் இருக்கும் மக்கள் இதனால் உடைந்து போவார்கள். கொரோனா அதிகம் பாதிப்பது இவர்களைத்தான். இவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால் இந்த நிதி உதவி அவர்களுக்கு கிடைக்கும் வரை , நிலைமை இப்படியே இருக்காது.
பிரச்சனைகளை உருவாக்கும்
இது போன்ற சூழ்நிலைகள் மக்கள் மனதில் கலவர எண்ணத்தை உண்டாக்கும். நேற்று டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்திலேயே மக்கள் பலர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டார்கள். இது வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும். மக்கள் மனதில் இருக்கும் அச்சம் கோபமாக மாற வாய்ப்புள்ளது. முக்கியமாக பொருளாதார பாதுகாப்பை முன்னிறுத்தி பலர் கலவரங்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது.
சீனா, அமெரிக்கா , இத்தாலியில் நடக்கிறது
சீனா, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் கூட இதேபோல்தான் கலவரங்கள் நடந்தது. இத்தாலியில் இன்னும் மக்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட்டங்களை செய்து வருகிறார்கள். சீனாவில் கொரோனா தோன்றிய வுஹன் நகரத்தில் கூட கடந்த இரண்டு நாட்களாக மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். தங்களுக்கு வேலை இல்லை என்று போராட்டம் செய்து வருகிறார்கள்.
உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தியாவில் வரும் நாட்களில் அப்படி ஒரு நிலைமையை ஏற்படலாம். ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஆபத்தானது என்று இதனால்தான் கூறுகிறார்கள். அரசு கொரோனாவை எவ்வளவு தீவிரமாக எதிர்கொள்கிறதோ அதே தீவிரத்தோடு இந்த பிரச்சனையை அணுக வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் வரும் காலங்களில் இந்தியாவில் பெரிய அளவில் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.