அம்பேத்கர் கனவை நனவாக்க முயற்சித்தேன்.. சேவையாற்ற வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி.. ராம்நாத் கோவிந்த்!
டெல்லி: எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரிவு உபசார விழா
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ராம்நாத் கோவிந்த் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பதவியேற்றேன். அனைத்து எம்பி-க்களுக்கும் என் இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும். குடியரசுத் தலைவராக எனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளேன். அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சி செய்தேன்.

ஜனநாயகத்தின் கோயில்
ஜனநாயகத்தின் கோயிலாக நாடாளுமன்றம் திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசவேண்டும். கொரோனா வைரஸ் சூழலை இந்தியா சிறப்பாக கையாண்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினோம்.

அனைவருக்கும் நன்றி
அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த அனைவரும் பாடுபட வேண்டும். எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். நாட்டுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications