கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளி சந்தைகளில் விற்க மத்திய அரசு அனுமதி...நிபந்தனைகள் விதிப்பு
இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இனி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்முதல் செய்து விற்பனை கொள்ளலாம்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்களில் ஒன்றாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஊசியும் செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
அந்தவகையில் புனே சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. ஜனவரி 26 ஆம் தேதி நிலவரப்படி 164 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசிகள் கொள்முதல்
இந்த தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. இதில் கோவாக்சின் தடுப்பு மருந்து ஒரு டோஸ் 1,200 ரூபாய்க்கும், கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஒரு டோஸ் 750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
நேரடியாக விற்பனை செய்ய அனுமதி
இந்நிலையில், சீரம் நிறுவனமும் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனனும் தங்களது தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. மேலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்து குறித்த பரிசோதனை தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த வல்லுநர் குழு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது.
நிபந்தனைகள் விதிப்பு
இதனையடுத்து, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருக்கிறது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வந்தோருக்கு மட்டுமே தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்முதல் செய்து விற்பனை கொள்ளலாம். அதே நேரத்தில் மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவின் இணையதளத்தில் பதிவு
மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் தங்கள் கொள்முதல்,விற்பனை செய்துள்ள தடுப்பூசி விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையத்திடம் 6 மாதத்திற்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்து கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி கொள்முதல்,விற்பனை தகவல்களை கோவின் இணையதளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கவிளைவுகள்
அதோடு இரண்டு நிறுவனங்களும், தற்போது செய்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்கவிளைவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.