ஜன.26 முதல் பாரத் பயோடெக்கின் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவாக்!
டெல்லி: கொரோனா தொற்று பரவலைத் தடுக்கக் கூடிய நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவாக் வரும் ஜனவரி 26-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
2019-ம் ஆண்டு உலகை பேரழிவுக்கு தள்ளிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம்.

இன்கோவான் தொடர்பாக பாரத் பயோடெக் தலைவர் எல்லா கூறுகையில், ஜனவரி 26-ந் தேதி நாட்டின் குடியரசு தின நாளில் இம்மருந்து அறிமுகமாகிறது என அறிவித்திருக்கிறார். இந்த மருந்து அரசு தரப்பில் ரூ325 எனவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ800 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
நாசி வழி தடுப்பு மருந்தானது மூக்கின் சளி சுரப்பியில் கொரோனா வைரஸ் தொற்று உருவாகும் இடத்தில் இருந்து எதிர்ப்பு திறனை உருவாக்கக் கூடியதாம். சளி சவ்வுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும் தன்மை கொண்டதாம். சுவாசக் குழாய்களில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குமாம். இதனை எளிதாக மூக்கு வழியாக செலுத்த முடியும். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.












Click it and Unblock the Notifications