கேரள தங்க கடத்தல் வழக்கில் தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு.. என்ஐஏ வெளியிட்ட பகீர் தகவல்
டெல்லி: பரபரப்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சர்வதேச அளவில தேடப்படும் மோசமான தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு பங்கு இருந்திருக்கலாம் என்றும் தீவிரவாத தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரள மாநில அரசியலை உலுக்கி எடுத்துள்ளது தங்க கடத்தல் வழக்கு. கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீராக தூதரகத்தின் பார்சல் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இதை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்த சுங்க கடத்தல் அதிகாரிகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்த சொப்னா என்பவரை அப்போது கைது செய்தனர்.
அவர் தற்போது சிறையில் இருக்கிறார். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுங்க இலாகா காபிபோசா சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால் அவர் சிறையில் தான் இருக்கிறார்.
தூதரக தொடர்பு
இந்நிலையில் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைப்பதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக தூதகரத்துடன் உள்ள தொடர்புகள் குறித்து மேலும் ஆராய முடியும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.
கேரள தங்க கடத்தலில் தாவூத்
இது தொடர்பாக என்ஏஏ கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரமீஸ், தான்சானியாவில் ஒரு வைர வியாபாரி இருப்பதாகவும், அவர் நாட்டிலிருந்து தங்கத்தை வாங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விற்றதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும் தாவூத் இப்ராஹிம் குறித்த ஐ.நா.பாதுகாப்புக் தடைகள் குழு சொன்ன விஷயங்கள் மற்றும் ஆப்பிரிக்காவில் தாவூத் கும்பலின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவால் வெளியிடப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை ஆராய்ந்ததில் தான்சானியாவில் தாவூத் இப்ராஹிமின் வைர வியாபாரத்தை நிர்வகிப்பதாக நம்பப்படும் ஃபெரோஸ் என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
குற்றத்தை நிரூபிக்க
தற்போதைய நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இருவரை கைது செய்து அழைத்து வருவதை பாதிக்கும். ஏனெனில் பைசல் ஃபரீத் மற்றும் ரக்கீம் ஹமீத் ஆகியோர் ஆகஸ்ட் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எங்களின் வேண்டுகோளின் பேரில் இந்த இருவரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு காவலில் உள்ள இந்த நபர்கள் ஜாமீன் பெற்றால் அது அவர்களின் தடுப்புக்காவலிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
ஜாமீன் வழங்க கூடாது
உளவுத்துறையின் தகவலின்படி, கேரளாவில் தங்கக் கடத்தலில் இருந்து கிடைக்கும் வருமானம் இந்தியாவிற்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது" இவ்வாறு தேசிய புலானாய்வு அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு நிதி
என்ஐஏவின் தனது கருத்தை ஆதரிக்கும் விதமாக, இந்தியாவின் பொருளாதார நிறுவனங்களுக்கான உயர்மட்ட புலனாய்வு அமைப்பான மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம் (CEIB), கடந்த ஆண்டு அக்டோபரில் என்ஐஏவின் இயக்குநருக்கு அறிக்கை ஒன்று சமர்பித்துள்ளது. இதையும் நீதிமன்றத்தில் என்ஐஏ சமர்பித்துள்ளது. CEIB இலிருந்து பெறப்பட்ட சில தகவல்களை நீதிமன்றத்துடன் சீல் வைத்த உறையில் பகிர்ந்துள்ளது. உலகளாவிய கண்காணிப்புக் குழுவான FATF அல்லது நிதி நடவடிக்கை பணிக்குழு கூட பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி மற்றும் தங்கத்துடன் தொடர்புடைய பாதிப்புகளை அடையாளம் கண்டிருப்பதை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்ஐஏ.