ஐடி சட்டம் பிரிவு 66ஏ கீழ்.. எந்தொவரு வழக்கையும் கண்டிப்பாக பதிவு செய்ய கூடாது.. மத்திய அரசு கறார்
டெல்லி: ரத்து செய்யப்பட்ட ஐடி சட்டம் பிரிவு 66A கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது எப்படி என உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது
இந்தியாவிலுள்ள ஐடி சட்டம் பிரிவு 66A பல ஆண்களுக்கு முன்பே நீக்கப்பட்ட ஒரு சட்டமாகும். இந்தச் சட்டப்பிரிவின்படி ஆபத்தானது அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுபவர்களைக் கைது செய்யலாம்,

இந்தச் சட்டம் குறித்துக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஐடி சட்டப்பிரிவு 66 ஏ அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி அந்தச் சட்டம் நீக்கப்பட்டது.
இருந்தாலும்கூட கடந்த சில ஆண்டுகளில் இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்த 11 மாநிலங்கள் மொத்தம் 745 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், ஐடி சட்டம், 2000இன் சட்டப்பிரிவு 66ஏ- ன் கீழ் போலீஸ் நிலையங்களில் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டாம் என மாநில அரசு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என உள்துறை அமைச்சகம், கடிதம் எழுதியுள்ளது.
மேலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும் மாநில அரசுகளை உள் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications