தாய்க்கு தைராய்டு.. சாப்பாட்டுக்கு கஷ்டம்.. கொரோனா பாதித்த உடல்களை கையாளும் பணியில் பிளஸ் 2 மாணவன்!
டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி இடுகாடுகளுக்கு கொண்டு செல்லும் இறுதிச் சடங்கிற்கு ஒப்படைக்கும் ஆபத்தான பணியை பிளஸ் 2 மாணவர் ஒருவர் தினமும் செய்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் நடக்கிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு சிகிச்சை செய்தும் பலனில்லாமல் ஏராளமானோர் இறக்கும் சூழல் நிலவுகிறது.
அவ்வாறு கொரோனா பாதிப்பால் இறப்போரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. மாறாக சுகாதாரத் துறை அதிகாரிகளே அந்த உடலுக்கு கிருமிநாசினிகளை தெளித்து முறையாக சுற்றப்பட்டு நேரடியாக இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இறுதிச் சடங்கு
அங்கு அவ்வாறு கொண்டு செல்லப்படும் உடல்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகளை மேற்கொள்வர். அதன் பின்னர் 10 அடிக்குமேல் ஆழமுள்ள பள்ளத்தில் கிருமிநாசினிகள் ஊற்றப்பட்டு அந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இது போன்ற உடல்களை மருத்துவமனை வார்ட்டிலிருந்து அகற்றி ஆம்புலன்ஸ் மூலம் மின் தகன மையத்திற்கு அல்லது இடுகாட்டிற்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கிற்கு ஒப்படைக்கும் பணியை பிளஸ் 2 மாணவர் ஒருவர் செய்துவருகிறார்.

டாக்டர்
அந்த மாணவர் வடகிழக்கு டெல்லி பகுதியில் அமைந்துள்ள சீலாம்பூரைச் சேர்ந்த சந்த் முகமது ஆவார். எதிர்காலத்தில் மருத்துவராக ஆக வேண்டும் என்பதுதான் இவரது ஆசை. ஆனால் குடும்பச் சூழலோ அதற்கேற்ப இல்லை. ஒரு வேளை உணவிற்கே அவதியுறும் நிலை உள்ளது. இவரது ஆசை எதிர்காலத்தில் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுதான்.

குடும்பம்
குடும்பச்சூழலோ அதற்கு உகந்ததாக இல்லை. ஒரு வேளை சாப்பாடு தினமும் கிடைப்பே பெரிய விஷயம் ஆகிறது. தாய்க்கு தைராய்டு நோய், சிகிச்சைக்கோ பணம் இல்லை. இந்த நோய்க்கு அவ்வப்போது மருந்து வாங்கி சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும். இந்த நிலையில் குடும்பத்தை அவரது மூத்த சகோதரர் ஓரளவு தூக்கி நிறுத்தி வந்தார்.

மருத்துவமனை
கொரோனாவால் அவரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தாய்க்கு மருந்து வாங்க சந்த் முகமதுவுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. இந்த நிலையில் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை பணியாற்ற வேண்டும்.

மருந்து
இதுகுறித்து அவர் கூறுகையில் ஆபத்து என தெரிந்தே கொரோனா நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸுக்கும் மயானத்திற்கும் மாற்றும் பணியை செய்து வருகிறேன். வேலை கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் பணியாற்றி வருகிறேன். சாப்பாடு, அம்மாவுக்கு மருந்து ஆகியவை தேவை. இந்த வேலை மூலம் 17000 ஊதியம் வாங்கி வருகிறேன்.

பாதுகாப்பு உறை
எனது முதல் மாத சம்பளம், குடும்பத்தின் கஷ்டத்தை ஓரளவு தீர்க்கும் என நம்புகிறேன். இந்த கவச உடையை அணிந்து கொண்டு செய்வதால் என்னால் வேகமாக இயங்க முடியாது. மூச்சுத் திணறும். அதிக உஷ்ணம் காரணமாக வியர்வை ஏற்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு மாதமாக சொந்தம் கொண்டாடி யாரும் வராத ஒரு உடலை தன்னந்தனியாக நான்தான் ஆம்புலன்ஸில் ஏற்றினேன். அப்போது உடலின் மேல் இருந்த பாதுகாப்பு உறை கழன்று வந்துவிட்டது.

கவலை
அதிலிருந்த ரசாயன திரவமும் என் தொடை மீது கொட்டி விட்டது. வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிடுவேன். குடும்பத்தினருடன் சமூக இடைவெளியை ஏற்படுத்திக் கொள்கிறேன். எனது அம்மாவுக்கு என் மீது கவலை அதிகமாகிவிட்டது. எல்லா பாதுகாப்பையும் பின்பற்ற செய்கிறேன். இருந்தாலும் எப்போது என்ன நடக்குமோ என்றார் முகமது.












Click it and Unblock the Notifications