டெல்லியில் 10000 படுக்கைகள் ரெடி.. கொரோனாவும் வேகமா குறையுதாம்.. சொல்கிறார் கெஜ்ரிவால்.. !
டெல்லி: டெல்லியில் ஜூன் மாதம் கணிக்கப்பட்டதற்கும் குறைவாகவே கொரோனா தொற்று பரவல் இருந்ததாகவும், இதனால், மேலும் வரும் நாட்களில் தொற்று பரவல் குறையும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே அதிகளவில் கொரோனா தொற்று மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் சிறிய கால கட்டத்தில் அதிகளவில் தொற்று பரவியது.
இதனால், இக்கட்டான சூழலை சமாளிக்கும் வகையில் டெல்லியில் 10,000 படுக்கைகள் கொண்ட முகாம் தற்காலிகமாக அமைக்கப்பட்டது.
கொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் ஜூலை 15 வரை 144 தடை உத்தரவு அதிரடி அமல்
10000 படுக்கைகள்
டெல்லி, சத்தர்பூரில் இருக்கும் ராதா சேவாமி ஆன்மிக மையத்தில் 10,000 படுக்கைகள் அமைக்கப்பட்டன. இதில் 10 சதவிகித படுக்கைகளுக்கு தற்போது ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மறுசுழற்சி செய்யப்படும் அட்டைகளிலிருந்து 1000 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படுக்கைகளை ஒருமுறை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
திபெத் எல்லை பாதுகாப்புப் படை
இந்த மையம் முழுவதும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் 60,000 பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இந்த தொற்று பரவல் குறைந்து வெறும் 26,000ஆக இருந்ததாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு 4,000 என்ற அளவில் தொற்று பரவல் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதுவும், 2,600ஆக குறைந்து இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா மரணங்கள்
டெல்லியில் தற்போது 87,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதுவும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 2,199 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்துடன் இந்த எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக அதிகரித்து, இதுவரை டெல்லியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,742 ஆக உள்ளது.
என்ன ரகசியம்
மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 26,270 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ''கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவும் வைரஸ் தொற்று குறைவதற்கான காரணமாக இருக்கலாம். தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர். முன்பு 100 பேரில் 31 பேருக்கு தொற்று இருந்தது. இது தற்போது 13 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்பு விகிதமும் டெல்லியில் 3% ஆக மட்டுமே இருக்கிறது.
குணமடைந்தோர் அதிகரிப்பு
தேசிய அளவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 59 ஆக இருக்கும்போது, டெல்லியில் 60%ல் இருந்து 66 ஆக அதிகரித்துள்ளது'' என்றார். முன்பு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அளித்து இருந்த பேட்டியில், டெல்லியில் ஜூன் மாத இறுதியில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருக்கும் என்றும், நடப்பு ஜூலை மாத இறுதியில் 5.5 லட்சமாக அதிகரிக்கும் என்று கூறி இருந்தார். இதை முன்னிட்டே பத்தாயிரம் படுக்கைகள் தனியார் உதவியுடன் அமைக்கப்பட்டது.
ரயில் பெட்டி வார்டுகள்
மேலும் சிக்கலை சமாளிக்க 500 ரயில் பெட்டிகளை கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருப்பது சந்தோஷம் அளிக்கிறது என்று டெல்லிவாசிகள் தெரிவித்துள்ளனர்.