காசிப்பூர் எல்லையில்... டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா திடீர் ஆய்வு!
டெல்லி: விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் காசிப்பூர் எல்லையில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு தண்ணீர் மற்றும் கழிப்பறைகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட வந்ததாக அவர் கூறினார்.
திகிரி எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லி முழுவதும் பதற்றமாக உள்ளது.
தொடரும் போராட்டம்
உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி சந்திக்கும் பகுதியான காசிப்பூர் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திகிரி எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து கையில் தேசியக்கொடி, விவசாய சங்க கொடிகளுடன்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எல்லைகள் மூடல்
இதனால் பலத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. டெல்லியே பதற்றமாக உள்ளது. காசிப்பூர் உத்தரபிரதேச எல்லையில் உள்ளதால் டெல்லியை போன்று இங்கும் அசம்பாவித சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் உத்தரபிரதேச அரசு உறுதியாக உள்ளது.
குடிநீர் வசதி இல்லை
காசிப்பூர் எல்லையில் முகாமிட்டுள்ள பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத், இங்கு விவசாயிகளுக்கு தண்ணீர் வசதி, கழிவறை வசதி எதுவும் இல்லாமல் செய்து விட்டார்கள். எனது சொந்த கிராமத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து போராட்டம் நடத்துவேன் என்று கூறினார்.
மனிஷ் சிசோடியா ஆய்வு
இந்த நிலையில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, காசிப்பூர் எல்லைக்கு சென்று அங்கு விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களிடம் பேட்டியளித்த மனிஷ் சிசோடியா, நேற்று இரவு இங்கு( காசிப்பூர் எல்லை) தண்ணீர் மற்றும் கழிப்பறைகளுக்கான வசதிகள் செய்யப்பட்டன. அந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வந்தேன் என்றார்.