நோ ஆப்சென்ட்.. எம்பிகளுக்கு ஆர்டர்! டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் அமித்ஷா
டெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வருகிறது.

டெல்லி யூனியன் பிரதேச அரசின் உரிமை இந்த அவசர சட்டத்தால் பறிபோகும் என்பது ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டு. இதற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து இதற்கு எதிராக தனது ஆதரவைப் பெற்று வந்தார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த அவர், மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளைச் சந்தித்து பேச வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு வந்த அர்விந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவரிடம் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் குரல் கொடுக்க வலியுறுத்தினார். இதற்கு தமிழ்நாடு அரசும் சம்மதம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம்பிடித்து உள்ளது. டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்தது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
மக்களவையில் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலமாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார். இதில் அனைத்து எம்பிக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications