இந்திய அளவில் தற்கொலையில் சென்னை 2 ஆம் இடம்.. தினக்கூலிகள் தற்கொலை திடீர் அதிகரிப்பு!
டெல்லி: இந்திய அளவில் 2020ல் பதிவான தற்கொலைகளில் டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2020ல் பதிவான தற்கொலைகளில் தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலைதான் அதிகம் என்று தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
2020 கொரோனா காலத்தில் இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. லாக்டவுன் காரணமாக பணி இழப்பு, தினசரி கூலித்தொழிலாளர்களுக்கு வேலை இல்லாதது, வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தமாக தினக்கூலிகள் 37657 பேர் கடந்த 2020ல் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தினக்கூலிகள் 2019ல் ஏற்பட்டதை விட 2020ல் 14 சதவிகிதம் அதிக அளவில் தற்கொலை நிகழ்ந்து உள்ளது.

வேலை வாய்ப்பு
அதேபோல் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் இடையில் 11 சதவிகிதம் தற்கொலை அதிகரித்து உள்ளது. கடந்த வருடங்களை போல 2020லும் விவசாயிகள் இடையே தற்கொலை அதிகமாக இருந்துள்ளது. 10677 பேர் விவசாய துறையில் 2020ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019ல் 10281 பேர் மட்டுமே தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

விவசாயம்
இதில் விவசாய கூலித்தொழிலாளிகள் 5579 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த வருடம் இது 5098 ஆக இருந்தது. இதில் 5335 பேர் ஆண்கள். 244 பேர் பெண்கள். மொத்தமாக தினக்கூலிகள் 37657 பேர் கடந்த 2020ல் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கணக்குப்படி ஆண் கூலித்தொழிலாளிகள் 33,164 பேரும், சுயதொழில் பார்க்கும் ஆண்கள் 15,990 பேரும், வேலைவாய்ப்பு இல்லாத ஆண்கள் 12,893 பேரும் 2020ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பெண்கள்
பெண்களில் 22,372 குடும்ப தலைவிகளும், 5,559 மாணவிகளும், 4,493 பெண் கூலித்தொழிலாளிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொத்தமாக இந்தியாவில் 2020ல் 153,052 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2019ல் இதன் எண்ணிக்கை 139,123 ஆகும். அதாவது 10 சதவிகிதம் அதிகம். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 8 சதவிகிதத்திற்கும் அதிகமாக தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

சென்னை
மெட்ரோ நகரங்களில் டெல்லியில் அதிக தற்கொலைகள் நிகழ்ந்து உள்ளன. டெல்லியில் 3,025 பேர் தற்கொலை செய்துள்ளனர். சென்னை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னையில் 2,430 பேர் தற்கொலை செய்துள்ளனர். பெங்களூரில் 2,196, மும்பையில் 1,282 பேர் தற்கொலை செயித்துள்ளனர். இந்தியாவின் 53 பெரிய நகரங்களில் 37.4 சதவிகித தற்கொலைகள் இந்த 4 நகரங்களில்தான் பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications