நிருபர்களிடம் 'சோர்ஸ்' கேட்க முடியாது ஓகே.. ஆனால் பொறுப்போடு செயல்படுங்கள்.. டெல்லி ஹைகோர்ட் அட்வைஸ்
டெல்லி: பரபரப்புக்காக தனியுரிமையை மீறாதீர்கள் என செய்தி ஊடகங்களை டெல்லி ஹைகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்த டுவிட்டர் டூல்கிட் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், திஷா ரவி மற்றும் கிரெட்டா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல் என்று கூறி, சில செய்தி சேனல்கள் தகவல்களை ஒளிபரப்பின.
இதை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் திஷா ரவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 ஆங்கில செய்தி சேனல்களுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பிரதீபா சிங் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
"ஒரு பத்திரிகையாளரை அவர்களின் செய்தி ஆதாரத்தை (Source) என்ன என்பதை வெளிப்படுத்தக் கேட்க முடியாது. ஆனாலும், அவர்கள் வெளியிடும் செய்தி உண்மையானதாக இருக்க வேண்டும். திஷா ரவி வாட்ஸ்அப் உரையாடலை டெல்லி காவல்துறை கசிய விட்டதாக மனுதாரர் கூறியபோதிலும், காவல்துறை அதை மறுக்கிறது. ஊடகங்களோ காவல்துறை வட்டார தகவல்களை வெளியிட்டதாக செய்தி ஒளிபரப்பியுள்ளன.
நடந்துகொண்டிருக்கும் விசாரணையைப் பற்றி அரைகுறையான செய்திகள் மற்றும் ஊக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஒருவரின் தனியுரிமைக்கான உரிமை, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவை சீரானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் மீடியா கவரேஜ் நிச்சயமாக பரபரப்பை அடிப்படை நோக்கமாக கொண்டு இருக்கிறது.
சரிபார்க்கப்பட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பு செய்ய சேனல் எடிட்டர்கள் முன்வர வேண்டும். நிருபர்கள் மீது எடிட்டோரியல் குழு, இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே ஆன்லைனில் வெளியாகியுள்ள வாட்ஸ்அப் உரையாடல் தகவலை அகற்றுவதற்கான கோரிக்கை பின்னர் பரிசீலிக்கப்படும். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.