வேல்முருகன் மூலம் செய்த 'அதே' சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. இந்தமுறை கமலை குறி வைக்கும் திமுக.. புது யுக்தி!
மிக வலுவாக இருக்கும் அதிமுக கூட்டணியை எதிர்கொள்வதற்காக 2021 சட்டசபை தேர்தலில் திமுக புதிய யுக்தி ஒன்றை வகுக்கும் என்று கூறுகிறார்கள்.
டெல்லி: மிக வலுவாக இருக்கும் அதிமுக கூட்டணியை எதிர்கொள்வதற்காக 2021 சட்டசபை தேர்தலில் திமுக புதிய யுக்தி ஒன்றை வகுக்கும் என்று தகவல்கள் வருகிறது.
2021 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடம்தான் இருக்கிறது. இந்த தேர்தலுக்கு திமுக தனது தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரை நியமனம் செய்தது. அதோடு திமுக பெரிதாக பணிகள் எதையும் செய்யவில்லை.
ஆனால் இன்னொரு பக்கம் அதிமுக தீவிரமாக பாதுகாக்கப்பட்ட டெல்டா, 5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து, தமிழில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று பல விஷயங்களை செய்து குட் மார்க் வாங்கி வருகிறது.
திமுக அச்சம்
அதிமுக இதே வேகத்தில் சென்றால், திமுக மீண்டும் சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைமை வரும். திமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கடுமையான கட்டாயத்தில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். 2021 சட்டசபை தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். இதற்காக திமுக புதிய யுக்தி ஒன்றை வகுக்கும் என்கிறார்கள்.
என்ன செய்தார்
கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பெரிய அளவில் உதவி செய்தார். லோக்சபா தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த அவர் பாமகவிற்கு எதிராக களமிறக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வேல்முருகன் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இது வன்னியர் வாக்குகளை பாமகவிடம் இருந்து அபகரித்தது.
வன்னியர் வாக்குகள்
முக்கியமாக வட தமிழகத்தில் பாமக மிக மோசமாக தோல்வி அடைய வேல்முருகன் ஒரு காரணம். தமிழக அரசியலில் இது பல காலமாக இருக்கும் டெக்னீக்தான். அதாவது ஒரு கட்சி அல்லது அமைப்பு உடன் கூட்டணி வைக்காமலே, அந்த கட்சியை வைத்து எதிர் கூட்டணியை தோல்வி அடைய செய்வது. உதாரணமாக மக்கள் நல கூட்டணி மூலம் திமுக தோல்வி அடைந்தது. இந்த கூட்டணி உருவானதற்கு பின்னால் இருந்தவர் ஜெயலலிதாதான் என்ற வாதம் இப்போதும் இருக்கிறது.
அதே டெக்னீக்
தற்போது அதே டெக்னீக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். அதன்படி நடிகர் ரஜினிகாந்தை சமாளிக்க அவர் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உதவியை நாட வாய்ப்புள்ளது என்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் திமுகவிற்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார். இவர் அரசியல் கட்சி தொடங்கினால் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வார்.
அதிமுக கரிசனம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக மீது கொஞ்சம் கரிசனத்துடன் இருக்கிறார் ரஜினிகாந்த். அதேபோல் பாஜகவிற்கு ரஜினிகாந்த் நெருக்கமாக இருக்கிறார். இதனால் ரஜினிகாந்த் அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இல்லை. அவர் பெரும்பாலும் திமுகவிற்கு எதிராக களமிறங்குவார். ஏற்கனவே அசுர பலத்தோடு இருக்கும் அதிமுகவிற்கு ரஜினியின் வருகை பெரிய பலம் சேர்க்கும் என்கிறார்கள்.
கமல்ஹாசன் எப்படி
இதனால் கமல்ஹாசனை வைத்து அதிமுகவை வலுவிழக்க திமுக முயற்சி செய்யலாம் என்கிறார்கள். அதாவது வேல்முருகனை வைத்து பாமகவை காலி செய்தது போல கமல்ஹாசனை வைத்து ரஜினி - அதிமுகவை திமுக காலி செய்யும் என்கிறார்கள். இதற்கான பணிகள் ஏற்கனவே நடக்க தொடங்கிவிட்டது. கமல்ஹாசனை மருத்துவமனையில் சென்று ஸ்டாலின் சந்தித்தது , இந்தியன் 2 விபத்தின் போது போன் செய்து விசாரித்தது என்று பல விஷயங்கள் நடந்துவிட்டது.
பல விஷயம்
இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதோடு இரண்டு தரப்புக்கும் நெருக்கமாக இருக்கும் பலர் கமல்ஹாசன் மற்றும் திமுக இடையே தூது போய் கொண்டு இருக்கிறார்கள். கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் அதிக வாக்குகளை பெறலாம் ஆனால் எதிர்க்கட்சி ஆக முடியாது. திமுகவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தால் வேகமாக வளர்ச்சி அடையலாம் என்று அவருக்கு சிலர் அறிவுரை வழங்கி உள்ளனர். அதிமுக , ரஜினிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விரைவில் மக்கள் நீதி மய்யம் களமிறங்கும் என்கிறார்கள் .