நீட் தேர்வில் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற மத்திய அரசு செய்தது என்ன? தயாநிதி மாறன் கேள்வி
டெல்லி: கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற மத்திய அரசு செய்தது என்ன? அவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன'' என மக்களவையில் திமுக எம்.பி., தயாநிதி மாறன் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. நீட் விலக்கு மசோதாவை சட்டசபையில் திமுக அரசு நிறைவேற்றியது. இதை கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து மீண்டும் சட்டசபையை கூட்டிய திமுக நீட் விலக்கு மசோதாவை நிறைறே்றி கவர்னர் ரவிக்கு அனுப்பியுள்ளது. இதன்மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

லோக்சபாவில் கேள்வி
இந்நிலையில் தான் திமுக மூத்த தலைவரும், சென்னை மத்திய தொகுதி எம்பியான தயாநிதி மாறன் நீட் தேர்வு குறித்து மக்களவையில் எழுத்துபூர்வமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:

சமமான வாய்ப்பு உள்ளதா
கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தற்போதைய நீட் எனும் நுழைவுத் தேர்வானது சமமான வாய்ப்பினை உருவாக்கி தருகிறதா?. கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்கள் நீட் எனும் நுழைவு தேர்வில் வெற்றி பெற சமமான வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்த முடியுமா.

சிறப்பு நடவடிக்கை என்ன
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்கள் நீட் எனும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற தயாராவதற்கு உதவிடும் வகையில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் என்ன என்பதனை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்த வேண்டும்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா
மருத்துவ கல்வியில் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை அறிந்து கொள்ளவும், நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு, தங்கள் சக மாணவர்களை விட சாதகமாக அமைகிறதா என்பதை ஆய்வு செய்யவும் நீட் தேர்வின் முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவா. மருத்துவ கல்வி பயில்வோருக்கான சிறப்பு பயிற்சி முகாம்கள் பெருமளவு பெருகிவிட்ட நிலையில் அதுகுறித்து மத்திய அரசு ஏதேனும் ஆய்வறிக்கை தயார் செய்துள்ளதா. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications