கர்நாடகாவில் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய தடை.. லோக்சபாவில் குரல் எழுப்பிய திமுக எம்பி செந்தில்குமார்
டெல்லி: கர்நாடகாவில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணி தடை விதிக்கப்பட்டுள்ளது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக திமுக எம்பி செந்தில் குமார் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர பல்வேறு மாவட்டங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கல்லூரிகளுக்கு வரும் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்,
ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு போராடுவதால் கல்லூரி கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை.. மாணவிகள் குமுறல்
ஹிஜாப் தடை
இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரும் எடுத்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பல பியூ கல்லூரிகளும் இதேபோல ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்க தொடங்கியுள்ளன. கல்லூரிகளின் இந்த அறிவிப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். கடந்த காலங்களில் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் யாருக்கும் பிரச்சனை இல்லை என்றும் இப்போது மட்டும் கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
திமுக எம்பி செந்தில் குமார்
தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், ஹிஜாப் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பல்வேறு எம்பிக்களும் எழுப்பினர். இதில் அரசு நேரடியாகத் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள குண்டப்பா அரசு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
அரசு தலையிட வேண்டும்
கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை ஏன் அனுமதியில்லை. இந்த விவகாரத்தில் மாணவிகளைச் சிலர் மிரட்டியும் உள்ளனர். இது தொடர்பாக அரசு நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சசி தரூர், மஜ்லிஸ் கட்சியின் எம்பி இம்தியாஸ் ஜலீல் ஆகியோரும் இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
பதில் போராட்டம்
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இஸ்லாமிய மாணவிகள் நடத்தி வரும் போராட்டத்தில் தற்போது இஸ்லாமிய மாணவர்களும் இணைந்துள்ளனர். அதேநேரம் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு போட்டுக்கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அதேபோல இந்து மாணவிகளும் காவி நிறத்தில் ஷால் அணிந்து வகுப்புகளுக்குச் சென்று போராட்டத்தை நடத்தியுள்ளனர்.