பரபரக்கும் அரசியல் களம்..சசிகலா பற்றிய நிருபர்கள் கேள்வி.. "நன்றி" சொன்ன எடப்பாடி பழனிச்சாமி
டெல்லி:சசிகலா குறித்த கேள்விக்கு எப்போதுமே.. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்து வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நேற்று சசிகலா பற்றிய கேள்விக்கு அளித்த ஒரு பதில் பல்வேறு யூகங்களுக்கு காரணமாக மாறியுள்ளது.
அதிமுக தொண்டர்களுடன் சசிகலா வரிசையாக தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வந்த நிலையில் அதுகுறித்து சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது கூட ஆவேசமாகத்தான் பேட்டியளித்திருந்தார்.
அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் ஆயிரம் பேரிடம் வேண்டுமானாலும் தொலைபேசியில் பேசட்டும். அதனால் அதிமுகவுக்கு இழப்பு கிடையாது என்று தடாலடியாக பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.

அரசியல் மாற்றம்
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களாக அதிமுக அரசியல் சூழ்நிலை மாற தொடங்கியிருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். டெல்லிக்கு நேற்று வருகை தந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம். இதன்பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த அரசியல் மாற்றம் உண்மைதான் என்பது போல இருந்தது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கைகள்.

மோடியுடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடிபழனிசாமி கூறுகையில்.. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி தரக்கூடாது என்று தமிழகம் சார்பில் கோரிக்கையை முன்வைத்தோம். ஏனென்றால் மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்களில் பாலைவனமாகி விடும் என்பதை பிரதமரிடம் தெரிவித்தோம்.

மீனவர்கள் விவகாரம்
இலங்கையின் தாக்குதலை தடுத்து நிறுத்தி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேள்வி வலியுறுத்தினோம். இவ்வாறு எடப்பாடிபழனிசாமி தெரிவித்தார்.

சசிகலா பற்றி கேள்வி
அதேநேரம் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று சசிகலா கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "நன்றி" என்று கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.

அதிமுகவிற்குள் சசிகலா?
அதிமுக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் சசிகலாவை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது பாஜக மேலிட விருப்பமாக இருக்கிறது என்று நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன. சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்கி விடலாம் என்று கூட யோசனை நடப்பதாக கூறப்படுகிறது.

பதிலளிக்க மறுப்பு
இப்படியெல்லாம் செய்திகள் ஒருபக்கம் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வெளியே வந்த பிறகு சசிகலா பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக சசிகலா பற்றி ஆவேசமாக கருத்து கூறும் அவர் நேற்று பதிலளிக்காமல் சென்றுள்ளது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications